மலையக மண்ணுக்கு கிடைக்கப்பெற்ற மாபெரும் பரிசாய் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் ஹட்டன் டிக்கோயா கிளங்கனில் நிர்மாணிக்கப்பட்ட ஆதார வைத்தியசாலை கட்டிடம் பெரும் ஆரவாரத்துடன் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மொழித்துறை, கலந்துரையாடல், கல்வி, மலையகத்தின் எதிர்காலம் எனக் கருதப்படும் துறைகளைச் சார்ந்த பல தமிழ் பேசும் அமைச்சர்களும், மாகாண சபை உறுப்பினர்களும். அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில், பெரும் பொருட் செலவில் திறந்து வைக்கப்பட்ட குறித்த வைத்தியசாலையின் பிரதான பெயர்ப் பலகையில் தமிழ் கொலை இடம்பெற்றுள்ளமை எமது தமிழ் அமைச்சர்களின் பார்வையில் படாமல் போய்விட்டதா?
கடந்த 1 மாதமாக பிரதமரை வரவேற்பதில் நீயா? நானா? என்று போட்டிப் போட்டுக்கொண்டவர்கள் இதனை கவனிக்க மறந்து விட்டார்கள் போலும்.
திறப்பு விழாவில் உரையாற்றிய இந்திய பிரதமர் உலகிலேயே பழமையான மொழியைப் பேசுபவர்கள் மலையக மக்கள் என பெருமிதமாக பேசினார்.
எனினும், அவர் கலந்து கொண்ட நிகழ்விலேயே தமிழ் கொலை இடம்பெற்றிருப்பதை அவருக்கு எடுத்துக் கூறுவார் யார் உளரோ?