சமீபகாலமாக தமிழ் சினிமாவில் கதை திருட்டு, தலைப்பு சம்பந்தமாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்து வருகிறது.
படம் ஆரம்பிக்கும்போது எழாத பிரச்சினைகள் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கும் சமயத்தில் வந்து தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் பெரிய இடைஞ்சலை கொடுக்கும்.
பெரிய நடிகர், சிறிய நடிகர் என்கிற பாரபட்சம் இல்லாமல் எல்லா தரப்பு நடிகர்களின் படங்களும் இந்த பிரச்சினை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
அந்த வரிசையில் தற்போது ரஜினி நடித்து வரும் ‘காலா’ படத்திற்கும் பிரச்சினை எழுந்துள்ளது.
இயக்குனர் கஸ்தூரி ராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த ராஜசேகர் என்பவர்தான் இந்த பிரச்சினையை கிளப்பியுள்ளார்.
அதாவது, ‘காலா’ படத்தின் மூலக்கதை என்னுடையது என்றும், என்னுடைய கதையை திருடிதான் ‘காலா’ படத்தை எடுத்து வருவதாகவும் பொலிஸ் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
மேலும், ‘காலா’ படத்தின் தலைப்பும் என்னுடையதே என்றும், கடந்த 1994-ஆம் ஆண்டே தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் இந்த தலைப்பை பதிவு செய்துள்ளேன் என்றும் அவர் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
‘காலா’ படத்தின் படப்பிடிப்புகள் மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது ‘காலா’ படத்தின் கதை என்னுடையது என்று எழுந்துள்ள புகார் படக்குழுவினருக்கு பெரிய தலைவலியை கொடுத்துள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்கு படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். ‘காலா’ படத்தில் சமுத்திரகனி, பாலிவுட் நடிகைகள் ஹுமா குரேஷி, அஞ்சலி பாட்டீல் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.