புதன்கிழமைகளில் பெண்கள் தலையில் வெள்ளைத்துணி அணியும் முறையைக் கட்டாயப்படுத்துகின்ற ஒரு சட்டத்திற்கு எதிரான புதியதொரு சமூக ஊடகப் பரப்புரை ஈரானில் வேகமாக பரவி வருகிறது.
எதிர்ப்பை வெளிப்படுத்துவதன் அடையாளமாக, தலையில் வெள்ளைத் துணியை அல்லது வெள்ளைத் துண்டை அணிந்து தங்களின் புகைப்படங்களையும், காணொளிகளையும் #whitewednesdays (#வெள்ளைபுதன்கிழமைகள்) என்ற ஹேஸ்டாக்கை பயன்படுத்தி ஈரான் பெண்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தப் பரப்புரை, கட்டாய ஆடைமுறைக்கு எதிரான ஆன்லைன் இயக்கமான ‘மை ஸ்டீல்த்தி ஃபீரீடம்’ என்பதை நிறுவிய மஷிக் அலிநஜத் என்பவரின் மூளையில் உதித்ததாகும்.
பறிபோன சுதந்திரம்
1979 ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சிக்கு முன்பு, குட்டை பாவாடை, குறுகிய கையுடைய மேலாடை உள்பட மேற்குலக பாணி ஆடைகளை ஈரானியப் பெண்கள் அணிந்து வந்தனர்.
ஆனால், மறைந்த அயதொல்லா கொமேனி அதிகாரத்திற்கு வந்த பிறகு எல்லாம் மாறிவிட்டது.
“அடக்கம்” பற்றிய இஸ்லாமிய சட்டத்தின் கடுமையான விளக்கத்தோடு பெண்கள், அவர்களின் தலைமுடியை மூடுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர்.
அது மட்டுமல்ல, ஒப்பனை செய்யாதிருப்பதும், முழங்கால் நீள மன்டீவ் (manteau) அணிவதும் கட்டாயமானது.
1979 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தை எதிர்த்து ஒரு லட்சத்திற்கும் மேலான பெண்களும், ஆண்களும் போராட்டம் நடத்தினர். அப்போது தொடங்கி இதுவரை இந்தச் சட்டத்திற்கான எதிர்ப்பு ஒருபோதும் அகலவில்லை.
அதிகரிக்கும் எதிர்ப்பு
பெண்கள் தலையை மூடிக்கொள்ளாமல் எடுக்கப்பட்ட 3 ஆயிரத்திற்கு மேலான புகைப்படங்களையும், காணொளிகளையும், தொடங்கிய மூன்று ஆண்டுகளில், ‘மை ஸ்டீல்த்தி ஃபீரீடம்’ பெற்றுள்ளது.
‘மை ஸ்டீல்த்தி ஃபீரீடம்’ இணைய பக்கங்களில் பதிவிடப்பட்ட புகைப்படங்கள், அதிகாரிகளிடம் சிக்கிக்கொள்வதை தவிர்ப்பதற்காக ரகசிய இடங்களில் எடுக்கப்பட்டவைகளாகும். #whitewednesdays (#வெள்ளை புதன்கிழமைகள்) என்ற ஹேஸ்டாக், பொதுவாக பெண்கள் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு தளம் அமைத்து கொடுக்கிறது.
ஆபத்தான முயற்சி
#whitewednesdays (#வெள்ளை புதன்கிழமைகள்) என்ற ஹேஸ்டாக் தொடங்கப்பட்ட ஐந்தாவது வாரத்தில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோர் அதனை பின்பற்ற தொடங்கிவிட்டனர்.
முதல் இரண்டு வாரங்களில் 200 காணொளிகளுக்கு மேலாக அலிநஜத்துக்கு அனுப்பப்பட்டன. அவற்றில் சிலவற்றை 5 லட்சத்திற்கு மேலானோர் பார்த்துள்ளனர்.
பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது காணொளி ஒன்றில் பேசியுள்ள ஒரு பெண், தான் தலையில் அணிந்திருந்த துணியை தளர்த்திவிட்டு, “நான் இந்தப் பரப்புரையில் பங்கேற்பதில் உற்சாகமடைகிறேன்.
என் சிறைவாசம் பற்றி உங்களோடு பேச விரும்புகிறேன். நான் ஏழு வயதாக இருந்தபோது தொடங்கி அவர்கள் என்னை ஹிஜாப் அணிய செய்தனர்.
அதனை நான் விரும்பவில்லை. விரும்பவும் மாட்டேன்” என்று தெரிவித்திருக்கிறார்.