லட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் டி. ராஜேந்தர் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
ஜி.எஸ்.டி இந்த சரக்கு – சேவை வரி விதிப்பு என்பது, இந்தியாவின் கனவென்று, இந்த மத்திய அரசு கூறிவிடும். ஆனால் என்னை கேட்டால், எல்லா துறைகளிலும் விலைவாசி ஏறிவிடும். நடுத்தர ஏழை மக்களின் வாழ்வு நாறி விடும். இதிலே நாட்டின் முன்னேற்றம் எங்கே மாறிவிடும்?
இந்த அரசு வந்ததிலிருந்தே எந்த திட்டத்தால் நாட்டிற்க்கு வந்திருக்கிறது. வளர்ச்சி? வரி.. வரி.. என்று மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிர்ச்சி. இந்த பிரதமர் மோடி அரசு அமைந்ததிலிருந்தே மக்களுக்கு இல்லை மகிழ்ச்சி. இதிலே சரக்கு – சேவை வரி விதிப்புக்கு நடத்துக்கிறார்கள் பிரம்மாண்டமான நிகழ்ச்சி.
மத்திய அரசே – தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனும் பிராந்திய மொழி படங்களை ஒடுக்க நினைக்காதே – மாநில அரசுகளின் உரிமைகளை மீறி, உள்ளே நுழைய துடிக்காதே! மத்திய அரசே தென்னகத்தை நசுக்காதே! திரை உலகத்தை பொசுக்காதே!
நூறு ரூபாய் கட்டணத்தை தாண்டினாலே, மத்திய அரசு விதிக்குமாம் 28 சதவீதம். இதிலே மாநில அரசு கேளிக்கை வரியாய் விதிக்குமாம் 30 சதவீதம், இதர வரிகளையெல்லாம் சேர்த்து, அரசுக்கே கட்டி விட வேண்டும் 64 சதவீதம். மீதி இருப்பதோ 36 சதவீதம், இதை திரையரங்கு உரிமையாளர்களும், வினியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் போட்டுக் கொள்ள வேண்டும் பங்கு. நோகாமல், வேகாமல் அரசு சாப்பிடுமாம் நுங்கு. நொந்து கொண்டிருக்கும் சினிமா உலகிற்கு, ஊதுவார்களாம் சங்கு.
பக்கத்து மாநிலம் கேரளா, தன் மாநில கேளிக்கை வரியை செய்திருக்கிறது ரத்து. தமிழக அரசு மட்டும் ஏன் தமிழ் திரை உலகத்தை குத்துகிறீர்கள் இந்த குத்து?
ஆக இரட்டைவரி என்பது ரெட்டை குழல் துப்பாக்கி. திரையரங்குகளை மூடுவோம் என்று போராட ஆரம்பித்து விட்டனர். இன்னும் எங்கள் போராட்டம் வெடிக்கும் தொடர்ந்து உங்கள் காதுகளில் ஒலிக்கும்.
ரஜினியும் மோடியும் நெருக்கம் என்று சொல்கிறார்கள். ஆனால் சினிமா கட்டணம் உயர்வு பற்றி ரஜினி இதுவரை வாய் திறக்கவில்லை. கமல்ஹாசன் ஏற்கனவே தனது எதிர்ப்பை தெரிவித்துவிட்டார். ரஜினி ஏன் எதுவும் பேசவில்லை?
தமிழ் சினிமா எனது தாய் என்கிறார். ஆனால் இந்த சினிமாவை காப்பாற்ற ரஜினி எதுவும் செய்யவில்லை. எதிர்த்து குரல்கூட கொடுக்கவில்லை. பிரதமருடன் நெருக்கம் இருந்தும் சினிமாவை காப்பாற்ற ஏன்முன் வரவில்லை?
சினிமாவை கூட காப்பாற்ற முடியாத ரஜினி அரசியலுக்கு வந்தால் எப்படி தமிழ்நாட்டை காப்பாற்றுவார்? அவர் அரசியலுக்கு வருவது பற்றி இதுவரை தெளிவாக பேசவில்லை.
வந்தால் என்ன செய்யப் போகிறார்? சினிமாவுக்காக ரஜினி குரல் கொடுக்காதது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு டி. ராஜேந்தர் கூறினார்.