இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த தென்னிந்திய திரைப்படம் `பாகுபலி’ என்று சொல்லும் அளவுக்கு அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்தது. அதுமட்டுமல்லாமல் வசூல் ரீதியிலும் உலக அளவில் பெயர் சொல்லும் படமாக `பாகுபலி’ உருவெடுத்துள்ளது. `பாகுபலி’ படத்தின் இரண்டாவது பாகம் உலகளவில் ரூ.1700 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்திருக்கிறது.
இரண்டு பாகமாக வெளியான `பாகுபலி’ படத்தின் முதல் பாகம் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜுலை 10-ஆம் தேதி வெளியானது. நேற்றோடு `பாகுபலி’ முதல் பாகம் திரையிடப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தது. `பாகுபலி’ படத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர், சுப்பா ராஜு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். `பாகுபலி’ படத்தின் மூலம் உலக அளவில் இவர்கள் பிரபலமாகிவிட்டனர் என்று கூறினால் அது மிகையாகாது. அதிலும் பிரபாஸ், இந்திய பிரபலங்கள் பட்டியலில் 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து `பாகுபலி’ படத்தின் 2-ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி, நடிகர் பிரபாஸ் ரசிகர்களுக்கு நன்றி கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
என் வாழ்வின் பொன்னான, மிக சிறந்த அந்த நாளின் நினைவுகளை ஆழமான நன்றியோடு நினைவு கூறுகிறேன். `பாகுபலி’ குழுவினர் அனைவரும் ஒருமித்த எண்ணத்துடனும், மிகப் பெரிய ஆர்வத்துடனும், ஒற்றுமையாக பணியாற்றிய அந்த நாட்களின் நினைவுகள் என்னை சிலிர்ப்போடு திரும்பிப் பார்க்க வைக்கின்றன. என்னை இவ்வளவு பெரிய உயரத்தில் வைத்து அழகு பார்க்கும் ரசிகர்களுக்கும், நான் இந்த வேளையில் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து மகிழ்கிறேன். குறிப்பாக எஸ்.எஸ்.ராஜமௌலி சாருக்கும், `பாகுபலி’ குழுவினர் அனைவருக்கும் இந்த மாபெரும் வெற்றியை நன்றியோடு சமர்ப்பிக்கிறேன். இவ்வாறு கூறியிருக்கிறார்.