நாயகன் அஸ்வின் கல்லூரி ஒன்றில் இறுதிஆண்டு படித்து வருகிறார். அஸ்வினின் அப்பாவான ஜெயப்பிரகாஷ் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஒழுக்கம் வாழ்க்கைக்கு முக்கியம். ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை பின்பற்ற வேண்டும் என்பது ஜெயப்பிரகாஷின் கொள்கை. அதன்படியே மகன் அஸ்வின் மற்றும் மகளை வளர்த்திருக்கிறார்.
அஸ்வின் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசித்து வரும் நாயகியான சுவாதி, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். வெகு நாட்களாக இருவருக்கும் இடையே நட்பு இருந்து வந்தாலும், உள்மனதிற்குள் காதலும் இருக்கிறது. ஆனால் அந்த காதலை ஒருவொருக்கொருவர் வெளிப்படுத்தாமல் பழகி வருகின்றனர்.
இந்நிலையில், அஸ்வின் பைக்கில் செல்லும் போது எதிரே வந்த கார் ஒன்று அவர் மீது மோதி விடுகிறது. இதையடுத்து காரை விட்டு இறங்கிய அர்ஜய் தகாத வார்த்தைகளால் அஸ்வினை திட்ட, அஸ்வின் அவரை அடித்து விடுகிறார். இதையடுத்து அர்ஜயிடம் மன்னிப்பும் கேட்டுவிட்டு அந்த இடத்தில் இருந்து இருவரும் சென்றுவிடுகின்றனர்.
இதையடுத்து தனது இறுதிஆண்டு கல்லூரி படிப்பை முடித்த அஸ்வினின் சான்றிதழில் அவரது ஒழுக்கத்திற்கு குறை இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது. கல்லூரியில் எந்த பிரச்சனையிலும் சிக்காத அஸ்வின், இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தில் முறையிடுகிறார். அப்போது தான் கல்லூரியின் தலைவரான ஏ.எல்.அழகப்பனின் மகன் தான் அர்ஜய் என்பது தெரிய வருகிறது. அஸ்வினை பழிவாங்குவதற்கான நேரத்திற்காக காத்துக் கொண்டிருந்த அர்ஜய், அஸ்வினின் அப்பாவுக்கு முக்கியமாக கருதப்படும் ஒழுக்கத்தின் மூலமாக பழிவாங்கி விடுகிறார்.
தனது தந்தைக்கு தெரியாமல் எப்படியாவது இந்த சான்றிதழை மாற்றிவிட வேண்டும் என்று முயற்சி செய்கிறார். அதற்காக ஏ.எல்.அழகப்பனை சந்திக்கிறார். அரசியல், கட்டப்பஞ்சாயத்து என பல தொழில்களில் ஈடுபட்டு வரும் அழகப்பன் தேர்தலை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இந்நிலையில், அவரை சந்திக்க வரும் அஸ்வினை தனது ஆட்களை வைத்து சரமாரியாக அடித்து விடுகிறார்.
இதனால் கோபமடையும் அஸ்வின், இதற்கு காரணமான அர்ஜயை பழிவாங்க முடிவு செய்கிறார். மேலும் தனது சான்றிதழில் தனது ஒழுக்கத்திற்கு எதிராக ஏற்பட்ட கரையை துடைக்க வேண்டும் என்றும் முடிவு செய்கிறார். அழகப்பனின் அரசியல் கனவையும் தகர்க்க முடிவு செய்யும் அஸ்வின் முன்னெடுக்கும் போராட்டமே படத்தின் மீதிக்கதை.
அஸ்வின் தனக்கே உண்டான தனித்துவமான நடிப்புடன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கல்லூரியில் படிக்கும் இளைஞனாகவும், தந்தைக்கு பாத்திரமான மகனாகவும் அவரது நடிப்பு சிறப்பு. நட்பு, காதல், சண்டை என அனைத்திலும் அவரது கதாபாத்திரம் ரசிக்கும்படி இருக்கிறது. சுவாதி ஒரு செய்தியாளராக, எதற்கும் பயப்படாத ஒரு இளம் பெண்ணாக துடிப்புடன் நடித்திருக்கிறார். அவருக்கே உண்டான குறும்புடனும், ரசிக்க வைக்கும் சிரிப்புடனும் ரசிகர்களை கவர்கிறார்.
அர்ஜய் குறைவான காட்சிகளிலே வந்தாலும், தன்னை தாக்கிய ஒருவனை பழிவாங்கும் வில்லன் கதாபாத்திரத்தில் குறைவின்றி நடித்திருக்கிறார். ஜெயப்பிரகாஷ் தந்தையாகவே வாழ்ந்திருக்கிறார். ஒரு ஆசிரியருக்குண்டான மரியாதையுடனும், அதனை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் விதத்திலும் அவரது நடிப்பு சிறப்பு. ஒரு ரவுடி, அரசியல்வாதிக்கு உண்டான கெத்துடன் ஏ.எல்.அழகப்பன் கதைக்கு ஏற்ப முக்கிய காட்சியில் வந்து செல்கிறார். மற்றபடி கருணாகரன், டேனியல், செண்ட்ராயன், அனுபமா குமார் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
அப்பா – மகன் இருவருக்கும் இடையே இருக்கும் பாசப் பிணைப்பை சிறப்பாக சொல்லியிருக்கும் எஸ்.அசோக் அமிர்தராஜுக்கு பாராட்டுக்கள். ஒரு நடுத்தர குடும்பத்தில் வளர்ந்து வரும் ஒரு இளைஞன் அவனது வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனையை சிறப்பாக கூறியிருக்கிறார். கல்வி முக்கியம், கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பலவற்றை நல்ல உதாரணத்துடன் எடுத்துரைத்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் விலைபோகும் பொருளாக கல்வி மாறிவருவதாகவும், கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் பொறுப்பு யாரிடம் இருக்கக் கூடாதோ, அவர்களிடம் சிக்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் விளக்கியிருக்கிறார். எனினும் படத்தின் திரைக்கதைக்கு கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம். அதேநேரத்தில் படத்தில் ஒரு காட்சியில் இருந்து மற்றொரு காட்சிக்கு இருக்கும் தொடர்பு, ரசிகர்கள் மத்தியில் ஏற்கும்படியாக இல்லை.
அஜிஸ் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. படத்தின் பின்னணி இசையும் ரசிக்கும்படி இருக்கிறது. கே.ஜி.வெங்கடேசின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது.
மொத்தத்தில் `திரி’ கல்வியின் குறி.