நாயகன் சந்த்ரு சீனு வேலையில்லாமல் ஊர் சுற்றி வரும் கிராமத்து இளைஞனாக வலம் வருகிறார். அந்த கிராமத்தில் பேசப்படும் நபராக இருக்கும் சந்த்ருவின் அப்பா. அவர் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களை சந்த்ரு ஊர்சுற்றியே செலவு செய்து வருகிறார். எதன் மீதும் அதிக ஈடுபாடு கிடையாத சந்த்ரு கார், பைக்கே கதியென இருக்கிறார்.
சந்த்ரு எந்த தவறு செய்தாலும், அதற்கு அவரது தந்தை அவருக்கு ஆதரவாகவே பேசுவது, நாயகனுக்கு வாழைப்பழத்தை உறித்து வாயில் ஊட்டுவது போல இருக்கிறது. இந்நிலையில், சந்த்ரு நாயகி நித்யா ஷெட்டியை சந்திக்கிறார். நித்யாவை சந்தித்த முதல் தருணத்திலேயே சந்த்ருவுக்கு அவர் மீது காதல் வந்து விடுகிறது. கண்டிப்பான குடும்பத்தைச் சேர்ந்த நித்யா, அவரை காதலிக்க மறுக்கிறார்.
கல்லூரி செல்லும் நித்யாவிடம், அவரது தந்தை காதல் உள்ளிட்ட எந்த வலையிலும் சிக்கிவிடக் கூடாது என்று கண்டிப்பாக வளர்த்திருக்கிறார். இதனால் சந்த்ருவின் காதலை ஏற்க மறுக்கும் நித்யாவை, தினமும் சந்த்ரு பின்தொடர்ந்து காதல் தொல்லை கொடுக்கிறார். ஒருகட்டத்தில், அவர் செய்த தவறுகள் அனைத்தையும் கூறி, அவளுக்காக இனிமேல் தவறான வழிகளில் ஈடுபட மாட்டேன் என்று உறுதியளிக்கிறார்.
சந்த்ருவின் பேச்சைக் கேட்டு, நித்யாவும் அவரை காதலிக்க சம்மதம் தெரிவிக்கிறார். இவ்வாறாக சந்தோஷமாக இருவரும் காதலித்து வரும் நிலையில், இவர்களது காதல் நித்யாவின் தந்தைக்கு தெரிய வர, இவர்களது காதலுக்கு அவர் மறுப்பு தெரிவிக்கிறார்.
இதையடுத்து நித்யாவே உயிரென இருக்கும் சந்த்ரு, அவரை கரம் பிடித்தாரா? இவர்களது காதலுக்கு நித்யாவின் தந்தை பச்சைக் கொடி காட்டினாரா? அதற்காக சந்த்ரு என்ன செய்தார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
தந்தையின் காசை செலவு செய்வதில் பொறுப்பின்றியும், காதல் காட்சிகளிலும் சந்த்ரு சிறப்பாக நடித்திருக்கிறார். நித்யா ஷெட்டி அழகாகவும், பொறுமையாகவும் காட்சிக்கு தேவையானதை சிறப்பாக கொடுத்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் கதைக்கு ஏற்ப வந்து செல்கின்றனர்.
படத்தின் இயக்குநரான ஜி.ஏ.சோமசுந்தரா, காதல் காட்சிகளை மட்டுமே பெரும் பகுதியாக எடுத்திருக்கிறார். இது ரசிகர்களிடையே ஒருவிதமான முகசுளிப்பை ஏற்படுத்துகிறது. திரைக்கதை என்ற ஒன்றை இயக்குநர் மறந்துவிட்டார் என்பது போல காட்சிகள் கோர்க்கப்பட்டுள்ளன. இதுவே படத்திற்கு பெரிய மைனஸ்.
எஸ்.ஜெயநாதனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசை ஓரளவுக்கு ரசிக்கும்படி இருக்கிறது. விஜய்யின் ஒளிப்பதிவு படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.
மொத்தத்தில் `காதல் காலம்’ காதல் மட்டுமே.