பொதுவெளியில் பாரம்பரியமான, பழமைவாத உடை அணியும் வழக்கம்கொண்ட செளதி அரேபியாவில், இளம்பெண் ஒருவர் மரபை மீறிய உடையணிந்து எடுக்கப்பட்ட வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
ஆளரவமில்லா ஒரு புராதன கோட்டையில் சிறிய, இறுக்கமான, கையில்லா உடைகளை அணிந்து, அந்தப் பெண் நடப்பது அந்த காணொளிக் காட்சியில் காட்டப்பட்டுள்ளது.
செளதி அரேபியாவில் பெண்கள், கைகள் மற்றும் பாதங்கள் தவிர இதர உடல் பாகங்கள் மூடுமாறு, நீண்ட, தளர்வான ஆடைகளை அணியவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மரபுகளை மீறி இவ்வாறு உடையணிந்து வீடியோ பதிவிட்டிருக்கும் பெண்ணை கைது செய்யவேண்டும் என்று சமூக ஊடகங்களில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், தனது விருப்பத்தை நிறைவேற்றுவதை குற்றமாக கருதக்கூடாது என்ற கருத்துக்களும் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படுகிறது.