சட்டசபை தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் முடித்து வைக்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த 2001-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது கிருஷ்ணகிரி, புவனகிரி, ஆண்டிப்பட்டி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் 2 தொகுதிகளுக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்வது தேர்தல் விதிமுறைகளுக்குப் புறம்பானது என்று கூறி குப்புசாமி எம்.பி. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு வழக்கை சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்குமாறு உத்தரவு பிறப்பித்தன் அடிப்படையில் வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையின் போதே மனுதாரரான குப்புசாமி எம்.பி. கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் காலமானார். எனவே மனுதாரரின் மரணத்தை காரணம் காட்டி சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
ஆனால் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என நாகப்பட்டினம் தொகுதி முன்னாள் எம்.பி.யான ஏ.கே.எஸ்.விஜயன் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் ஒரு மனுதாரர் குப்புசாமி காலமாகி இருந்தாலும், இந்த விஷயத்தில் தான் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் புகார் தாக்கல் செய்திருப்பதால் இந்த வழக்கைத் தொடர தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என ஏ.கே.எஸ்.விஜயன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதிடப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு ஜெயலலிதா மீதான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தது.
இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்காக பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால் விசாரணை தொடங்கியதும், ஜெயலலிதா காலமாகி விட்டதால் தற்போது இந்த வழக்கு காலாவதியாகி விட்டது எனக்கூறி நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.