தான்சானியாவில் நடைபெற்ற டெடி குளோபல் மாநாட்டில், சிலிக்கான் இல்லாமல் எலியின் நியூரான்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கணினியை நைஜீரியாவின் ஓஷி அகபி என்பவர் வெளியிட்டுள்ளார்.
இந்த கணினிக்கு வெடிகுண்டுகளின் வாசனையை கண்டறியும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், இதனை விமான நிலையங்களில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தலாம்.
மோடம் போன்ற வடிவம் கொண்டுள்ள,` கொனிகு கோர்` என பெயரிடப்பட்டுள்ள இந்த சாதனம், எதிர்கால இயந்திர மனிதர்களுக்கு மூளையாககூட செயல்படலாம்.
ஆனால், இதுபோன்ற சாதனங்களை, வெகுஜன சந்தைகளுக்கு ஏற்ப தயாரிப்பது சவாலானது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மனித மூளையை எடுத்துக்காட்டாக கொண்டு, செயற்கை நுண்ணறிவை உருவாக்க மைக்ரோ சாப்ட் மற்றும் கூகுள் போன்ற பல பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் முயற்சி எடுத்து வருகின்றன.
சிக்கலான கணித சமன்பாடுகளை செய்வதில் மனிதனை விட கணினிகள் சிறப்பாக செயல்பட்டாலும், பல அறிவாற்றல் செயல்பாடுகளில் கணினியை விட மனித மூளைகள் மேம்பட்டவையாக உள்ளன.வாசனைகளை மோப்பம் பிடிப்பதற்கு கணினிகளுக்கு பயிற்சியளிக்க,மகத்தான அளவிலான சக்தியும், கணக்கீடும் தேவைப்படும்.
இந்த புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ள ஓசி அகபி, தனது `கொனிகு` என்ற புதிய நிறுவனத்தை கடந்த ஆண்டு துவங்கினார்.
தன்னுடைய நிறுவனத்திற்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி திரட்டிய அவர், பாதுகாப்புத் துறையில் தன்னுடைய நிறுவனம், ஏற்கனவே 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை லாபம் சம்பாதிப்பதாக தெரிவித்திருந்தார்.
கோனிகு கோர் என்பது நுகர்வுத் திறனுடன் வாழக்கூடிய நியூரான்கள் மற்றும் சிலிக்கான் ஆகியவற்றின் கலவையாகும். அடிப்படையில் சென்சார் அமைப்பை கொண்டுள்ள இது, வாசனை கண்டறிவது மட்டுமல்லாமல் அவற்றை நுகர்ந்து பார்க்கும் தன்மையுடையது.
எதிர்காலத்தில் இது போன்ற சாதனங்களை நேரடியாக அல்லாமல், விமான நிலையத்தில் நிற்கும் நீண்ட வரிசையை குறைக்கும் வகையில் பாதுகாப்பிற்காக பயன்படுத்தலாம்.
மேலும் இதன் மூலம் வெடிகுண்டுகளை கண்டறியவும், காற்றில் உள்ள மூலக்கூறுகளை நுகர்ந்து அந்த இடத்தில் இருக்கும் நபருக்கு ஏற்பட்டுள்ள நோய் குறித்தும் கண்டறியவும் பயன்படுத்த முடியும்.
இந்த முன்மாதிரி சாதனம் குறித்த தகவலை , டெட் குளோபல் மாநாட்டில் வெளியிட்ட அகபி, அது குறித்த புகைப்படங்களை தற்போது வெளியிட முடியாது என தெரிவித்தார். மேலும் நியூரான்களை தொடர்ந்து உயிர்ப்புடன் வைப்பதில், தாங்கள் சந்தித்து வந்த மிகப்பெரிய சவால்களில் ஒன்றுக்கு தற்போது தீர்வு கண்டுபிடித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
`இந்த சாதனம் ஒரு மேசை மீது உயிர் வாழும். இதனை சில மாதங்கள் நம்மால் உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்.` என அவர் பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
நரம்பியல், உயிரியல் பொறியியல் மற்றும் கணினி அறிவியல் ஆகியவற்றின் வளர்ச்சி மூலம், இதற்கு முன்னர் இல்லாத வகையில் மனித மூளையின் செயல்பாடுகள் குறித்த பல தகவல்கள் கிடைத்து வருகின்றன.
இவை கணினி மூளையை உருவாக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வரும் நரம்பியல் தொழில்நுட்ப சாதனங்களுக்கு ஊக்கத்தை அளித்து வருகிறது.
மூளை தொடர்பான காயங்கள் மற்றும் நோய்கள் உள்ளிட்ட பல்வேறு மூளை சார்ந்த பிரச்சனைகளினால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையின் செயல்பாட்டினை மேம்படுத்துவது குறித்து தற்போதைய ஆராய்ச்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் மூட்டுகளை, அவர்களின் மூளை அலைகளைக் கொண்டு நகர்த்தும் முக்கியமான ஆராய்ச்சியில், ஜெனிவாவில் உள்ள வைஸ் உயிரி மற்றும் நரம்பியல் பொறியியல் மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜான் டோனொக்யூ ஈடுபட்டு வருகிறார்.
உயிரியல் மற்றும் மின்னணு சாதனங்கள் இணைந்து செயல்படுவதே இந்த துறையின் முக்கியப்புள்ளியாக இருக்கும் என அவர் நம்புகிறார்.அகபி கண்டறிந்துள்ள இந்த புதிய தொழில்நுட்பம் சுவாரஸ்யமானது என அவர் கூறியுள்ளார்.
`மின்னணு கணினிகள் மிக வேகமானவை,நம்பகமானவை.ஆனால் சுணக்கமான இருக்கும். ஆனால் நியூரான்கள் மெதுவானவை. ஆனால் தெளிவாக செயல்படக்கூடியவை. ஆனால் இதில் உள்ள மிகப்பெரிய சவாலே, அந்த நியூரான்களை உயிர்ப்புடனும், மகிழ்ச்சியுடனும் வைத்திருப்பதுதான்.` என அவர் குறிப்பிடுகிறார்.
ஆனால், ஏற்கனவே ஜெனிவாவில் உள்ள விஞ்ஞானிகள், இது போன்ற நியூரான்களை ஒரு ஆண்டு வரை உயிர்ப்புடன் வைத்திருந்து, அவற்றுடன் தொடர்பு கொண்டு வந்துள்ளனர்` எனக் கூறும் அவர், இந்த அமைப்புகள் மூளையின் செயல்பாட்டை ஆராய்வதில் மிகவும் சிறந்த சாதனமாக பயன்படுவதாக தெரிவித்துள்ளார்.
`மற்ற விஞ்ஞானிகள் நியூரான்கள் போல செயல்படக்கூடிய, மிக அதிக அளவில் நிலைத்திருக்கக் கூடிய சிலிக்கான் சிப்புகளை உருவாக்கும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ` என அவர் கூறுகிறார்.
ஆனால், இந்த சிலிக்கான் முயற்சி வெற்றியடையுமா என்பது குறித்து சந்தேகம் தெரிவிக்கும் அகபி, ` நியூரானைப் போன்ற சிலிக்கானை உருவாக்குவது மிகக் கடினம்` எனவும் `அவற்றை அளவிட முடியும் எனவும் தான் நினைக்கவில்லை` எனவும் தெரிவித்துள்ளார்.