பாலியல் வன்கொடுமை பற்றி அனைவருக்கும் தெரியவேண்டும். இது வெறும் உடல்ரீதியான தாக்குதல் மட்டும் அல்ல. இது ஒரு கொடூர தாக்குதல், மனதை வாட்டும் நினைவு. ஆனால் அது தொடர்பான குறிப்பான கேள்விகளுக்கு மீண்டும் மீண்டும் இலக்காக வேண்டியிருக்கும்.
ஒருவர் பாலியல்ரீதியான வன்கொடுமைக்கு உள்ளாகும்போது என்ன செய்யவேண்டும் என்றும் தெரிந்து கொள்ளவேண்டும். இதிலிருந்து எப்படி காப்பாற்றிக் கொள்வது என்பதையும் தெரிந்துக் கொள்வது அவசியம்.
ஓராண்டுக்கு முன்பு அடையாளம் தெரியாத ஒருவன் என்னை பாலியல் வன்கொடுமை செய்தான். அப்போது எனக்கு 18 வயதுதான். அந்த இடத்தில் இருந்து ஒரு நிமிடத்தில் சென்றுவிடக்கூடிய தொலைவிலேயே என் வீடு இருந்தது. இருள் சூழந்த அந்த நேரத்தில் என்னுடைய மொபைல் ஃபோனில் ‘ரிகார்ட்’ பட்டனை அழுத்திவிட்டேன்.
மொபைல் வெளிச்சத்தை கண்டு சுதாரித்து அவன் என்னை விட்டு விலகிவிடுவான் என்று நினைத்தேன். ஆனால் அது நடைபெறவில்லை. ‘மொபைலில் பதிவு செய்கிறேன், என்னை விட்டுவிடு’ என்று நான் கத்தினேன், ஓலமிட்டேன்.
ஆனால் அவன் எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. என்னை தரையில் கீழே தள்ளி துன்புறுத்தினான். அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை என்ற போதிலும், எல்லாமே முடிந்துவிட்டது போல், தோற்றுவிட்டதுபோல் உணர்ந்தேன்.
என் வீட்டுக்கு அருகிலேயே நான் கற்பழிக்கப்பட்டேன் என்பதை நம்பவே முடியவில்லை, நான் எழுந்து வீட்டிற்கு ஓடினேன்.
நிலைமையை உணர்ந்த என் குடும்பத்தினர் உடனே காவல்துறைக்கு போன் செய்தார்கள். நான் மிகவும் அழுக்காக உணர்ந்தேன். உடலை சுத்தப்படுத்திக் கொள்ள சென்றபோது, தடுத்துவிட்டார்கள். மிகவும் கேவலமாக உணர்ந்தேன்.
அருகிலுள்ள ‘பாலியல் தாக்குதல் உதவி மையத்திற்கு’ செல்லும்படி சொன்னார்கள்.
வீட்டிலிருந்து 45 நிமிடங்கள் பயணத் தொலைவில் இருந்த மையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டேன்.
அந்த பரிசோதனையின்போது உடலில் இருந்து ஆடைகள் அகற்றப்பட்டன. உலோக படுக்கை ஒன்றில் படுக்க வைத்து, குச்சி போன்ற ஒரு பொருளை பிறப்புறுப்புக்குள் செலுத்தினார்கள்.
அது மிகவும் கொடுமையான அனுபவம். காயமும், வலியும் ஏற்படுத்தியது. அந்த மருத்துவ மையத்தில் இருந்த பெண்கள் அன்புடன் ஆதரவாக நடந்து கொண்டார்கள்.
என் உடலில் வரைந்திருந்த ‘டேட்டூ’வைப் பற்றி அவர்கள் பேசினார்கள். நான் பாதுகாப்பாக, இயல்பாக இருப்பதற்காக அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டது ஆறுதலாக இருந்தது.
எஸ்.டி.ஐ, எச்.ஐ.வி மற்றும் கர்ப்ப பரிசோதனையும் செய்யப்பட்டது. எச்.ஐ.வி உட்பட வேறு பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்க, சில மாத்திரைகளை கொடுத்தார்கள். நாளொன்றுக்கு மூன்று முறை என ஒரு மாதத்திற்கு மாத்திரைகளை சாப்பிடவேண்டியிருந்தது.
மருந்துகளை சாப்பிட்டதால் பக்கவிளைவுகள் ஏற்பட்டன. வாந்தி வரும், மயக்கமாக இருக்கும். அடிக்கடி மருத்துவரிடம் சென்றேன். ஒரு மாதம் முழுவதும் இப்படி அலைச்சலாகவே இருந்த்து, மனதும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஒரு சாதாரண பெண்ணான நான், காவல் நிலையத்திற்கும் சென்றுவர வேண்டிய சூழ்நிலை. ‘பரிசோதனைக்கூட எலியாக இருக்கிறேனா? என்றும் தோன்றத் தொடங்கியது.
எனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை நிகழ்வு எனக்காக விபத்துபோல் இருந்தாலும், அதைப் பற்றி எத்தனை முறை திரும்பத் திரும்ப சொல்லியிருப்பேன் என்றே தெரியவில்லை.
மருத்துவர் ஒருமுறை என்னிடம் விசாரித்தபோது, மிகவும் ஆழமான, அந்தரங்கமான விவரங்களை எல்லாம் கேட்டபோது அதிர்ந்து போனேன்.
‘உன் காலுக்கு கீழ் இருந்த ஆடையை கீழ்புறமாக இழுத்தானா? இல்லை மேற்புறமாக தூக்கினானா?, அவன் உன்னை எப்படி தாக்கினான், நீ என்ன செய்தாய்? என்பது போன்ற கேள்விகளால் வெறுத்துப்போனேன்.
இதுபோல் பதில் சொல்லவே முடியாத பல கேள்விகள் பலமுறை கேட்கப்பட்டன. இதையெல்லாம் எதிர்பாராத நான் பைத்தியம் போல் அழுவேன். ஒரு கட்டத்தில் புகாரையே திரும்பப் பெறலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டேன்.
இதுபோன்ற சங்கடங்களை நான் மட்டுமே எதிர்கொள்ளவில்லை. மேலும் பலருக்கு இதுபோன்ற கொடுமைகள் நிகழ்ந்திருக்கும். ஆனால் அனைவரும் இதைப் பற்றி வெளியே சொல்வதில்லை. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர்களில் 15 சதவித பெண்களே அது குறித்து புகார் அளிக்கின்றனர்.
அதில் 5.7 சதவிதத்தினருக்கே நியாயம் கிடைக்கிறது. அவர்களில் ஒருத்தியாக நான் இருக்கமுடியாதா என்று எனக்கு நானே நம்பிக்கையூட்டிக் கொண்டேன். பாதி கட்டத்தை தாண்டிய பிறகு, பின்வாங்கும் நினைப்பே வரக்கூடாது என்று உறுதி பூண்டேன்.
சாலையில் சென்று கொண்டிருக்கும் ஒரு குற்றவாளியை கைது செய்யும் வாய்ப்பு கிடைத்தால் அதை ஏன் கைநழுவ விடவேண்டும்? என்று நினைத்தேன். என்னுடைய பாதையில் குறுக்கிட்டு தவறு செய்தவனை தண்டிக்க வேண்டுமானால் நான் பின்வாங்கக்கூடாது.
என்னுடைய படுக்கையில் அமர்ந்தவாறே இப்படித்தான் என்னை தேற்றிக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்வேன்.
நான் பதிவு செய்த பலாத்கார வீடியோவை வைத்து குற்றவாளியை கண்டுபிடிக்கமுடியாது. ஆனால் அதை ஒரு சாட்சியாக பயன்படுத்தி, அவனை குற்றவாளி என நிரூபித்தோம். அவனுக்கு 13 வருட சிறை தண்டனை என தீர்ப்பானது.
எனக்கு பக்கபலமாக நீதிமன்றத்தில் அம்மாவும் என்னுடன் இருந்தார். இந்த வழக்கில் எனக்கு வேறு பலரும் உதவி செய்தார்கள். தீர்ப்புக்கு பிறகு அனைவரின் முகத்திலும் தெரிந்த மகிழ்ச்சி எனக்கு ஆறுதல் அளித்தது.
மாதக்கணக்கான போராட்டமும் அழுத்தமும் முடிவுக்கு வந்து அனைவரும் ஆசுவாசமடைந்தோம். வாழ்க்கையின் கொடிய காலகட்டத்தில் இருந்து இப்போது நான் வெளியே வந்துவிட்டேன்.
பல மாதங்களுக்கு பிறகு யூடியூபில் ஒரு வீடியோவை உருவாக்கினேன். அதற்கு நான் வைத்த பெயர் என்ன தெரியுமா? ‘பாலியல் தாக்குதல் பற்றி உங்களுக்கு சொல்லப்படாத விஷயங்கள்.
எனக்கு பாலியல் வன்கொடுமை நடைபெறுவதற்கு முன்பு இது போன்ற வீடியோவை பார்த்திருந்தால், அதை சமாளித்திருப்பேனே என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. அதுபோன்ற சமயத்தில் என்ன செய்யவேண்டும் என்பதும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.