இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் மண்டி மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் அமித் ஷர்மா எனப்படும் பத்து வயது சிறுவன் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான். அந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இதுகுறித்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் இந்த சம்பவம் குறித்த விசாரணையின்போது அந்த சிறுவன் எழுதிவைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் புளுவேல் விளையாட்டின் ஒரு சவாலை முடிக்க முடியாததால் தற்கொலை செய்துகொள்வதாக கூறியுள்ளான்.
இந்த கடிதம் கிடைத்த பின்னரே அந்த சிறுவன் புளுவேல் விளையாட்டு விளையாடிவந்தது அவனது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. அதற்காக அவன் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு கட்டிட தொழிலாளியின் கைபேசியை பயன்படுத்தியுள்ளான் என போலீசார் தெரிவித்தனர்.
நாட்டில் புளுவேல் விளையாட்டினால் ஏற்பட்டுவரும் தற்கொலைகளில் எண்ணிக்கை அதிகரித்துவருவதையடுத்து பெற்றோர்களுக்கு மாநிலப் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.