பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (98) என்பவர் கடந்த 1938ம் ஆண்டு, பொருளாதார பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக மேற்கொண்டு படிப்பை தொடரமுடியாமல் போனது.
இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு, நாலந்தா திறந்தநிலை பல்கலைகழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பில் சேர விண்ணப்பித்திருந்தார். அவர் அவரது விண்ணப்பத்தை அந்த பல்கலைகழகம் ஏற்றுக்கொண்டதையடுத்து அவரது குடும்பத்தினரின் ஆதரவோடு பட்டப்படிப்பில் சேர்ந்தார். அவர் தற்போது முதுநிலை பட்டப்படிப்பை 98 வயதில் முடித்துள்ளார். அவர் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவரது இந்த வெற்றி அவர் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து அவர் பேசுகையில், “ எனது முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் கனவு பற்றி என் குடும்பத்தினரிடம் நான் சொன்னபோது, என் குடும்பத்தினர் என்னை ஊக்கப்படுத்தினார்கள். எனக்கு படிக்க அனுமதி கிடைத்தது. இது ஒரு சவாலாக இருந்தது, அதை ஏற்றுக்கொண்டேன். இறுதியாக, நான் எனது நீண்டநாள் கனவை நிறைவேற்றியிருக்கிறேன். முன்னர் குழந்தைகள் மீதுள்ள பொறுப்புகள் காரணமாக நான் விரும்பியதை அடைய முடியவில்லை. ஆனால் இப்போது என் குழந்தைகள் அனைவருமே நல்ல நிலையில் குடியேறியுள்ளனர், அதனால் இப்போது எனது முழுமை பெறாத அனைத்து கனவுகளையும் நான் அடைய முடியும்”, என கூறினார்.