பாகிஸ்தான் உள்ளூர் மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் தேவையை நிறைவேற்ற அந்நாடு இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்யும். தற்போது கண்டெய்னர்கள் எல்லையை கடப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக தாக்காளி பற்றாக்குறை அதிகரித்து உள்ளது என எக்ஸ்பிரஸ் டிரிபியூன் செய்தி வெளியிட்டு உள்ளது. லாகூரில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ. 300 எட்டியுள்ளது. இருப்பினும் இந்தியாவிடமிருந்து தக்காளியை இறக்குமதி செய்ய மாட்டோம் என அந்நாட்டு உணவுத்துறை மந்திரி ஷிகந்தர் ஹயாத் போசான் கூறியுள்ளார்.
இப்போது உள்ளூர் வியாபாரிகள் சிந்து மாகாணத்தில் இருந்து தாக்காளி வரும் என எதிர்பார்ப்பில் உள்ளனர் என அந்நாட்டு மீடியா கூறியுள்ளது.
பாகிஸ்தான் உணவுத்துறை மந்திரி ஷிகந்தர் போசான் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாகிஸ்தானில் இப்போது நிலவும் தக்காளி மற்றும் வெங்காய பற்றாக்குறையானது சில நாட்களில் சரிசெய்யப்படும், பலுசிஸ்தானில் இருந்து விளைச்சல் பொருட்கள் வந்ததும் நிலை சீராகும். எந்த நிலையிலும் இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் காய்கறிகளை வாங்காது என அவர் கூறியுள்ளார்.
லாகூர் உள்பட பஞ்சாப் மாகாணத்தில் பல்வேறு இடங்களில் தக்காளியின் விலை ரூ. 300 ஆக உள்ளது என டான் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக 100-120க்கு விற்பனையான தக்காளியின் விலை இப்போது ரூ. 300ஐ எட்டியுள்ளது. இப்போது ஒரு கிலோ தக்காளியின் விலையை ரூ. 132- 140 என அரசு நிர்ணயம் செய்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
லாகூர் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் அப்துல் பாசித், இந்தியாவிடம் இருந்து காய்கறிகள் வாங்க மாட்டோம் என மந்திரி ஷிகந்தர் ஹயாத் போசான் அறிவித்து உள்ளதை பாராட்டியுள்ளார். பாகிஸ்தானிடம் நாட்டு மக்களுக்கு உணவளிக்க வளங்கள் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருவதால் இருநாடுகளுக்கிடையேயான உறவில் விரிசல் காணப்படுகிறது. தீவிரரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்காதவரையில் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என இந்தியா தெரிவித்துள்ளது.