மஹ்மூத் பரூக்கியின் பாலியல் வல்லுறவு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி பார்த்தால் பெண்களின் மென்மையான முறையில் கூறும் ‘வேண்டாம்’ என்னும் பதில் அவர்கள் பாலுறவு கொள்வதற்கு ‘சரி’ என்று கூறுவது போலவே அர்த்தமாகிறது.
‘நீங்கள் என்னுடன் பாலுறவு வைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா?’ என்று உறவு கொள்ள விரும்பும் பெண்களிடம் ஆண்கள் உண்மையில் கேட்கிறார்களா?
பெண்கள் உண்மையில் ஒரு தெளிவாக, ‘ஆமாம், நான் விரும்புகிறேன்” அல்லது ‘இல்லை, விரும்பவில்லை’ என்று பதிலளிக்கிறார்களா?
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இரண்டு கேள்விகளுக்கும் பதில் ஒரு கூர்மையானதாக ‘இல்லை’ என்றே நினைக்கிறேன்.
இல்லை, ஆண்கள் அப்படி அப்பட்டமாக கேட்கவும் இல்லை பெண்களும் அவ்வளவு தெளிவாக பதிலளிப்பதும் இல்லை.
ஆனால் அவர்களின் பதிலை நாம் கண்டுபிடிப்பது இல்லையா என்ன?
நாம் அவர்களின் பதிலை கண்டுபிடிக்கிறோம். ஏனெனில், ஒருவரின் ஒப்புதல் இல்லாமல் உறவு கொள்வது பாலியல் வல்லுறவு என்று சட்டம் கூறுகிறது.
அதாவது, நண்பர்களாகிய இருவருக்கிடையில், ஒருவர் பாலுறவு வைத்துக்கொள்ள விருப்பமில்லை என்று கூறியும் வற்புறுத்தி அவரை பாலுறவுகொள்ள வைத்தால் அதற்கு பாலியல் வல்லுறவு என்றே பெயர்.
இந்தியத் திரைப்பட தயாரிப்பாளரான மஹ்மூத் பரூக்கி போன்ற விடயத்தில் இந்த தெளிவு இல்லை என்பதால் பிரச்சனை எழுகிறது.
அமெரிக்க ஆராய்ச்சி மாணவர் ஒருவர் பரூக்கிக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கில் ‘தெளிவான’ பதில் அதாவது உதாரணத்திற்கு ‘இல்லை’ என்பது போன்றதொரு பதிலை டெல்லி உயர்நீதிமன்றத்தால் கண்டறிய முடியவில்லை.
பரூக்கி ஆராய்ச்சி மாணவியோடு நெருக்கமாக இருக்க நினைத்தபோது, அந்த மாணவி அதற்கு தெளிவாக ‘வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்தாரா அல்லது அதை அவர் புரிந்து கொள்ளவில்லையா என்பதில் தெளிவில்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
எனவே, இதில் எழுந்த சந்தேகத்தின் காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டார். இதன் காரணமாக ஏற்கனவே கீழமை நீதிமன்றம் அவருக்கு அளித்த ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து அளிக்கப்பட்ட தீர்ப்பு ரத்து செய்ய்யப்பட்டது.
எனவே, இங்கு படுக்கையில் இருக்கும்போது ‘சரி’ என்று பதிலளித்தால் அதற்குரிய அர்த்தம் என்னவென்று கேள்வி எழுகிறது.
ஆம், எங்கள் படுக்கையறை கதவை அடைந்ததும் போர்வைகளுக்குள் புதைக்கப்படும் சிறிய விவரமாக அது மாறிவிடுகிறது.
நாம் அனைவருக்கும் பாலியல் உறவென்பது பிடித்த ஒன்றாக இருந்தாலும் தற்போது அதைப் பற்றி பேசவே சங்கடப்படுகிறோம்.
காணொளி ஒன்று, இந்த சங்கடத்தை போக்கும் வகையில் ‘பாலுறவு’ என்னும் வார்த்தைக்கு பதில் ‘தேநீர்’ என்னும் வார்த்தையை பயன்படுத்தி ‘உங்களுக்கு தேநீர் வேண்டுமா?’ என்ற கேள்வியை எழுப்புகிறது.
இதற்கு மேலும் செல்லும் அந்த காணொளி, நீங்கள் ஒருவருக்கு தேநீர் அளிக்க விரும்பி, அதற்கு அவர் ‘வேண்டாம்’ என்று பதிலளித்தால் அவர்களை அதை குடிக்க நிர்ப்பந்திக்கக் கூடாது என்று சொல்கிறது.
அவர்கள் ‘ஆம்’ என்று கூறிய பிறகு, சிறிது நேரம் கழித்து அவர்களின் மனதை மாற்றினால், அவர்கள் அதை குடித்தாக வேண்டும் என்று நிர்பந்திக்கக் கூடாது.
தேநீர் குடிக்க ஒப்புக்கொண்டபின் அவர்கள் சுயநினைவற்ற நிலையிலிருந்தால், அப்பொழுதும் அதைக் குடிக்க நிர்ப்பந்திக்கக் கூடாது.
அவர்கள் கடந்த வாரமோ அல்லது நேற்று இரவோ விரும்பியிருந்தாலும், இன்று அதை விரும்பவில்லை என்றால், அவர்கள் அதை குடிப்பதற்கு நிர்ப்பந்திக்கக் கூடாது.
இங்கு ஒப்புதல் என்பதுதான் எல்லாமுமே.
தேநீருக்கு ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று தெளிவான பதில் கூறுவதற்கும் படுக்கையில் அளிக்கும் ஒப்புதலை விட எளிமையானது என்று நீங்கள் வாதிடலாம்.
ஆனால், தேநீரோ பாலுறவோ, அவற்றை நாடிச்செல்வது, பிறரிடம் கேட்பது மற்றும் அவர்களின் பதிலை ஏற்றுக்கொள்வது என்ற வழிகாட்டும் கொள்கை அனைத்திற்கும் பொதுவான ஒன்றாகவே உள்ளது.
உங்களுடன் படுக்கையில் இருக்கும் பெண் கண்கள் மூலமாக நிறுத்தச்சொல்லிக் கெஞ்சுகிறாரா, உங்கள் கைகளை தள்ளிவிட முயற்சிக்கிறாரா, உங்கள் உடலை தள்ளிவிட முயற்சிக்கிறாரா அல்லது மிகவும் இயல்பாக உங்களை நிறுத்திவிடச் சொல்கிறாரா?
அவள் உங்களுக்கு ஏதாவது ஒரு சமிக்ஞையை கொடுக்கிறாளா? நீங்கள் அதைக் கேட்கிறீர்களா? நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா? முக்கியமாக, அதைக் கேட்கவேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா?
முன்னறிமுகம் இல்லாத நபர்களால் நடத்தப்படும் பாலியல் தாக்குதல்களே பாலியல் வல்லுறவு என்று பிரபலமான ஊடகங்களால் அடையாளம் காட்டப்படுகின்றன.
ஒரு பெண், ஒரு ஆணால் உடல் வலிமை மூலமாக கட்டுப்படுத்தப்பட்டு, அவள் தெளிவாக அதிக சத்தத்துடன் தனக்கு அதில் விருப்பமில்லை என்று தெரிவிக்கிறாள் என்றால் அதில் சம்மதமே இல்லை, அது வல்லுறவுதான்.
ஆனால் அவர் ஒரு ஏற்கனவே அறிமுகமான, ஒரு நண்பர், காதலன் அல்லது கணவன் என்றால் என்ன?
கடந்த இருபதாண்டுகளில் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட கற்பழிப்பு வழக்குகளில் 97% அப்பெண்களுக்கு ஏற்கனவே அறிமுகமான நபர்களால் செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது.
மஹ்மூத் பரூக்கி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, ஒருவருக்கொருவர் அறிந்த, அறிவார்ந்த / கல்வியில் நிபுணத்துவம் பெற்ற இருவர், மற்றும் கடந்த காலத்தில் உடல்ரீதியான தொடர்புடன் இருந்த ஒரு பெண் அந்த ஆணிடம் ‘பலவீனமாக’ இல்லை என்று கூறினாலும் அது ‘ஆம்’ எடுத்துக்கொள்ளப்படலாம் என்று உணர்த்துகிறது.
இது உங்களுக்கு பரிட்சயமானதாக இருக்கிறதா? இது உங்களுக்குத் தெரிந்தவர்கள் பற்றிய வர்ணனையாக இருக்கிறதா? அல்லது உங்களுடையதாகவும் கூட இருக்கிறதா?
படித்தவர்கள் தங்களுக்கு தெரிந்த யாரோ ஒருவரிடம் ஆரோக்கியமான உடலுறவுக்கு நாடி செல்வர்.
மற்றவர் உண்மையிலேயே விரும்புகிறாரா என்பதைக் கண்டுபிடிப்பது எவ்வளவு கடினமான ஒன்று?
“என்னுடைய உடலையும், என் பாலியல் தன்மையையும் என் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கும் ஒருவராகவே நானிருந்தேன். ஆனால், அன்றைய இரவு நடந்தது அதை என்னிடமிருந்து பறித்து சென்றுவிட்டது” என்று அந்த அமெரிக்க ஆராய்ச்சி மாணவி தன் நண்பர் ஒருவரிடம் கூறியுள்ளார்.
ஒரு பெண் வெளிப்படுத்தும் அறிகுறிகளைக் கேட்கவும், பார்க்கவும், ஏற்றுக்கொள்ளவும் எவ்வளவு கடினமாக இருக்கிறது?
மேலும், ஒருவேளை அது பலவீனமான ‘வேண்டாம்’ என்றால், அது சம்மதம் என்று பொருளா? அல்லது அதன் பொருளைக் கண்டுபிடிக்க நாம் இன்னும் கூடுதலாக முயல வேண்டுமா?
நாம் ஒருவருக்கொருவர் அந்த அளவுக்கு கூட கடன்பட்டிருக்கவில்லையா?