நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிவுக்கு வெளியான ‘மெர்சல்’ படம் அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை சந்தித்தாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
மருத்துவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி பழிவாங்கும் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஸ்ரீ தேனாண்டான் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. தமிழகத்தில் வெளியாகிய சில நாட்களில் மத்திய-மாநில அரசுகளை தாக்கும் காட்சிகளும், வசனங்களும் படத்தில் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது.
எனவே குறிப்பிட்ட அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. பின்னர் அதற்கும் ஒரு முடிவு எட்டப்பட்டது. இவ்வாறாக இந்த படத்திற்கு வந்த சோதனைகளுக்கு ஒரு முடிவு எட்டப்பட்டிருக்கும் நிலையில், ‘மெர்சல்’ படத்தின் தெலுங்கு பதிப்பான `அதிரிந்தி’ படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்தது. அதன்படி வருகிற அக்டோபர் 26-ஆம் தேதி படம் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.
ஆனால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, `அதிரிந்தி’ படத்திற்கான தணிக்கைக் குழு சான்றிதழ் இன்னமும் பெறப்படவில்லையாம். எனவே சொன்ன நாளில் படம் வெளியாகுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி தமிழில் இடம்பெற்றிருந்த ஜி.எஸ்டி., பணமதிப்பிழப்பு, டிஜிட்டல் இந்தியா சம்பந்தப்பட்ட காட்சிகள் தெலுங்கில் பதிப்பில் இடம்பெறுவதிலும் சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.