விஜய் நடித்து வெளியாகி இருக்கும் ‘மெர்சல்’ படம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அரசியல் ரீதியான ஆதரவு மற்றும் எதிர்ப்பின் காரணமாக இந்திய அளவில் பேசப்பட்டது.
இந்த படத்தில் ஜி.எஸ்.டி. மற்றும் சுகாதார பிரச்சிணைகள் பற்றி வரும் வசனங்களுக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் பா.ஜனதா கட்சியின் பாட்னா எம்.பி.யும் பிரபல இந்தி நடிகருமான சத்ருஹன் சின்ஹா ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:-
நாட்டில் நிலவும் ஒரு பிரச்சினையை திரைப்படம் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இதில் எந்த தவறும் இல்லை.
திரைப்படம் மிகப்பெரிய மக்கள் தொடர்பு சாதனம். சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளை அதன் மூலம் மக்களிடம் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு உண்டு.
விஜய் தமிழ் திரை உலகில் பிரபலமான நடிகர். நாட்டில் ஏழைகள் மருத்துவ வசதி கிடைக்காமல் இருப்பது பற்றியும், ஜி.எஸ்.டி. தாக்கம் பற்றியும் ‘மெர்சல்’ படத்தில் சுட்டிக்காட்டி இருக்கிறார். இதில் என்ன தவறு?
தமிழகத்தில் பா.ஜனதா கட்சியினர் அந்த படத்தின் வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிறகுதான் பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது.
இந்த பிரச்சினைகள் பற்றி கட்சியில் உயர்மட்ட தலைவர்கள் யாரும் விமர்சிக்கவில்லையா?
இது எங்கள் கட்சியில் இருக்கும் சிலர் மற்றவர்களை விட விசுவாசமாக இருப்பதாக காட்டிக் கொள்வதற்காக நடத்தும் நாடகம்.
விஜய்க்கு எதிராக குரல் எழுப்புபவர்கள் நாட்டில் சுகாதாரம் மேம்பட குரல் எழுப்பட்டும். இவ்வாறு அவர் கூறினார்.