இந்திய வனங்கள் சட்டத்தின் கீழ், மரங்களுக்கான வரையறையில் இருந்து மூங்கிலை நீக்குவதற்கான இந்திய வனங்கள் திருத்த மசோதா, கடந்த 20-ந் தேதி பாராளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. இந்நிலையில், டெல்லி மேல்-சபையில் இம்மசோதாவை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி ஹர்ஷ வர்த்தன் தாக்கல் செய்தார்.
அதன் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய அவர், “இந்த நடவடிக்கையால், காடுகள் அல்லாத இடங்களில் மூங்கிலை வளர்ப்பதுடன், அதை வெட்டி மற்றொரு இடத்துக்கு அனுப்பலாம். இதன்மூலம், பழங்குடியினர், காடுகளை ஒட்டி வசிப்பவர்களின் வருவாய் அதிகரிக்கும்” என்று கூறினார்.
ஆனால், அவரது பதில் திருப்தி அளிக்கவில்லை என்று காங்கிரஸ், சமாஜ்வாடி, பிஜு ஜனதாதளம் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர், மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதனால், இரு அவைகளிலும் இம்மசோதா நிறைவேறி விட்டது. இருப்பினும், வனப்பகுதி நிலங்களில் மூங்கிலானது மரமாகவே கருதப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.