நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாகவும் தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். வருகிற சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக கூறியுள்ளார். தான் செய்யப் போவது ஆன்மீக அரசியல் என்றும் அதில் உண்மை, நேர்மையை கடைபிடிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையே, தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று மாலை சந்திக்க போவதாக ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
இந்நிலையில், போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து இன்றிரவு 7.45 மணியளவில் புறப்பட்ட ரஜினிகாந்த், கருணாநிதி எனது நீண்ட கால நண்பர் என நிருபர்களிடம் கூறினார்.
சரியாக, 7..55 மணியளவில் கருணாநிதி வீட்டுக்கு சென்ற ரஜினிகாந்தை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். அவருடன் சென்ற ரஜினிகாந்த் கருணாநிதியை சந்தித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
கருணாநிதியை சந்தித்தபின் வெளியே வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், அவரை சந்தித்த நான் உடல்நிலை குறித்து விசாரித்தேன். அதன்பின் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தேன். தொடர்ந்து, அவரிடம் நான் கட்சி தொடங்கியுள்ளது குறித்து தெரிவித்து ஆசி பெற்றேன் என தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நடந்தது. இந்த சந்திப்பின்போது ஊடகங்களை சேர்ந்த புகைப்படக்காரர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
புதுக்கட்சி தொடங்கும் நிலையில் ரஜினி, கருணாநிதியை சந்திப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.