தன் மார்பகங்களின் அளவைப் பிடிக்காத பெண்கள், வழக்கமான சுய பரிசோதனை செய்வது குறைவாக உள்ளதாக ஓர் ஆய்வு கூறுகிறது.
பிரட்டனில் 384 பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், தங்கள் மார்பகங்களின் அளவைப் பிடிக்காத பெண்கள், அதில் ஏற்படும் மாற்றத்தை கண்டறியும் நம்பிக்கையற்றவர்களாகவும், அப்படியே மாற்றத்தை கண்டறிந்தால் மருத்துவரிடம் செல்ல தாமதாக்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற சூழலில், தங்கள் மார்பகங்களை பரிசோதித்துக் கொள்வது, அவர்களுக்கு “அவமானம் அல்லது சங்கடம் அளிப்பது போன்ற எதிர்மறையான உணர்வுகளை தூண்டலாம்” என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆய்வு நடத்தப்பட்ட பெரும்பாலான பெண்கள் தங்களின் மார்பக அளவு குறித்து அதிருப்தியே தெரிவித்துள்ளனர்.
* 31 சதவீத பெண்களுக்கு சிறியளவிலான மார்பகங்கள் இருக்க விருப்பம்
* 44 சதவீத பெண்களுக்கு பெரிய மார்பகங்கள் மீது விருப்பம்
மார்பக சுய பரிசோதையை எப்போதாவது மட்டும் அல்லது அப்படியான பரிசோதனையில் ஈடுபடுவதே இல்லை என மூன்றில் ஒருபகுதி பெண்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஒரு மாதத்தின் வெவ்வேறு நாட்களில், தங்கள் மார்பகங்கள் எப்படி உள்ளது என்பதை தொட்டு உணர வேண்டும் என்று பிரிட்டனின் தேசிய சேவை மையம் பெண்களை அறிவுறித்தியுள்ளது.
பிரிட்டனில் மார்பக புற்றுநோய் என்பது பொதுவான ஒரு நோயாகிவிட்டது. ஆண்டுக்கு 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு இந்நோய் இருப்பதாக கண்டறியப்படுகிறது.
இந்த ஆய்வுக்காக நடத்திய கணக்கெடுப்பில், தனது மார்பகங்களில் மாற்றம் ஏற்பட்டால் முடிந்தளவு உடனடியாக மருத்துவரை அணுகுவோம் என 55 சதவீத பெண்கள் தெரிவித்தனர்.
எனினும், தாமதாகவோ அல்லது இதற்காக மருத்துவரை பார்க்கவே மாட்டோம் என பத்தில் ஒரு பெண் ஒப்புக்கொள்கிறார்.
மார்பக புற்றுநோய் இருப்பது முன்கூட்டியே கண்டறியப்பட்டால், எளிதாக சிகிச்சை அளிக்க முடியும் என்பதோடு அதனை குணப்படுத்தவும் முடியும்.
“அழகியல் தன்மைக்காக அல்லாமல் இது போன்ற விஷயங்களுக்காக பெண்கள் தங்கள் மார்பகங்களை ஆராய, இதுதொடர்பான அதிக விழிப்புணர்வுகள் உதவியாக இருக்கும்” என இந்த ஆராய்ச்சியை நடத்திய ஆஞ்சிலா ரஸ்கின் பல்கலைக்கழக பேராசியர் விரென் சுவாமி கூறினார்.
“உடல் அமைப்பு திருப்தி அளிக்கவில்லை என்று, நீங்கள் செய்து கொள்ள வேண்டிய சுய பரிசோதனையை தடுக்கக் கூடாது” என மெக்மிலன் புற்றுநோய் அமைப்பின் டேனி பெல் தெரிவித்தார்.
மார்பில் ஏற்படக்கூடிய கட்டிகள், மார்பக புற்றுநோயின் பொதுவான அறிகுறி என்றும், எனவே குறித்த இடைவெளியில் பரிசோதனை செய்து கொண்டால் முன்கூட்டியே கண்டறிய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.