டெல்லி விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற அமெரிக்க டாலர்களை வருவாய் புலனாய்வு துறை பறிமுதல் செய்துள்ளது. 3.2 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த அமெரிக்க டாலர்கள் ஃபாயில் பேப்பரில் சுற்றப்பட்டு ஹாங்காங் செல்லும் விமானத்தில் இருந்துள்ளது. அதனை கடத்த உதவியாக இருந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பெண் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இந்த பெண் அமீத் மல்கோத்ரா என்பவருக்கு கீழ் வேலை செய்தது தெரியவந்தது. அமீத் பல ஆண்டுகளாக இது போன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இவர் டெல்லியில் உள்ள முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தை பெற்று அதனை வெளிநாடுகளுக்கு விமான ஊழியர்கள் மூலம் கடத்துவார். இந்த பணத்தை கொண்டு தங்கம் வாங்கப்படுகிறது. பின்னர் அதனை இந்தியாவிற்கு சட்ட விரோதமாக கொண்டு வருகின்றன.
இந்நிலையில், அமீத் மல்கோத்ரா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஜெர் ஏர்வேஸ் ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுடன் தொடர்புடைய பலரை தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.