அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று கோலாகலமாக ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடந்தது. வண்ண மயமாக நடைபெற்ற இந்த விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை பிரான்சஸ் மிக்டார்மண்ட் பெற்றார்.
‘திரீ பில்போர்ட்ஸ் அவுட் சைடு எப்பிங் மிஸ்சோரி’ என்ற படத்தில் தனது மகளை கற்பழித்து கொன்றவர்களை பழிவாங்கும் தாயாக நடித்து இருந்தார். அவரது சிறந்த நடிப்பை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.
விழா முடிந்ததும் விருது பெற்றவர்களுக்கு விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பிரான்சிஸ் மெக்டார்மென்டின் ஆஸ்கர் விருது திடீரென மாயமானது. அதை யாரோ திருடி விட்டனர்.
அதை அறிந்த நடிகை பிரான்சஸ் மிக்டார்மண்ட் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார். அது குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது.
உடனே போலீசார் அதிரடியாக தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். பின்னர் விருந்தில் பங்கேற்ற டெர்ரி பிரையாந்த் (47) என்பவர் கைது செய்யப்பட்டார்.
திருட்டுபோன ஆஸ்கர் விருது அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டது. அதை பெற்றுக் கொண்ட நடிகை பிரான்சஸ் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். ஏற்கனவே இவர் 21 வருடங்களுக்கு முன்பு ‘பார்கோ’ என்ற படத்துக்காக ஆஸ்கர் விருது பெற்றுள்ளார்.