சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் 11 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது. இந்நிலையில், மும்பை போலீசார் நடத்திய சோதனைகளின்போது கடந்த ஆண்டு நடந்த 10-வது சீசனின் போது சூதாட்டம் நடந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சூதாட்ட கும்பலின் முக்கியமானவரான ஜலான் என்பவரை போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரூ.100 கோடிக்கு மேல் சூதாட்டம் நடந்திருப்பது தெரியவந்தது. மேலும் பல்வேறு நாடுகளில் உள்ளவர்களுக்கும் இந்த சூதாட்டத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், நடிகர் அர்பாஸ் கானுக்கும் இந்த சூதாட்டத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நடிகர் அர்பாஸ் கானை விசாரணைக்கு வரும்படி மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். பிரபல நடிகர் சல்மான் கானின் தம்பியான அர்பாஸ் கான், பல படங்களில் நடித்துள்ளார். படங்கள் தயாரித்துள்ள அவர், இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.