பொன்ராம் இயக்கத்தில் `சீமராஜா’ படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், அடுத்ததாக `இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
அதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், அந்த படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியருக்கிறது. 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கிறார். கருணாகரன், யோகி பாபு, பானுப்ரியா மற்றும் தொலைக்காட்சி பிரபலம் கோதண்டம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இவர்களுடன் இஷா கோபிகரும் நடிக்கிறார். இவர் இதற்குமுன் பிரசாந்துடன் ‘காதல் கவிதை’, அரவிந்த்சாமியுடன் ‘என் சுவாச காற்றே’, விஜய்யுடன் ‘நெஞ்சினிலே’, இறுதியாக விஜயகாந்துடன் ‘நரசிம்மா’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது சிவகார்த்திகேயன் படம் மூலம் 17 வருடங்கள் கழித்து தமிழுக்கு வருகிறார்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் உருவாகிறது.