முகத்தில் பச்சைக் குத்திக் கொள்ளும் பாரம்பரியம் கொண்ட இந்தியாவின் கடைசி தலைமுறை பழங்குடியின மக்கள் இவர்கள் தான். கொன்யக் நாகா என்று அழைக்கப்படும் இந்த பழங்குடியின மக்கள் லோங்வா என்ற குக்கிராமத்தில் வசிக்கிறார்கள்.
இந்த லோங்வா என்ற கிராமம் மியான்மரின் அடர்ந்த காட்டின் ஒரு பகுதியிலும் இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் இன்னொரு பகுதியும் அமைந்திருக்கிறது. நாகாலாந்தில் மொத்தம் பதினாறு பழங்குடியின குழுக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் கொன்யக் என்ற பழங்குடியின மக்கள் போர்வீரர்களாக பார்க்கப்படுகிறார்கள். அவர்களுக்குள்ளே நடக்கிற சண்டைகளானாலும் சரி பிற எதிரிகளிடமிருந்து வருகிற சண்டைகளனாலும் சரி இவர்கள் தான் முதலில் நிற்பார்கள், அதனால் பெரும்பாலும் இவர்கள் தங்கள் ஊரின் எல்லைப்பகுதிகளில் மற்றும் மலையின் உச்சியில் வாழ்ந்து வந்தார்கள்.
இதனால் எதிரியின் அசைவுகளை உடனேயே அறிந்து கொள்ள முடியும். அதோடு தங்கள் ஊருக்குள் நுழைய விடாமல் எல்லையிலேயே அவர்களை அடித்து விரட்டி விடலாம்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே கடைபிடித்து வருகிற வழக்கத்தின் படி தங்களுடைய எதிரி என்று அடையாளப்படுத்தப்படுகிற நபர்களின் தலையை வெட்டி எடுத்துச் சென்று விடுவார்கள். சிலர் அந்த மண்டைஓட்டை காலங்காலமாக தங்களின் வெற்றிச் சின்னமாக போற்றி பாதுகாக்கிறார்கள்.
இவர்களை தலை வேட்டையர்கள் என்றும் அழைக்கிறார்கள். அந்த வெற்றியை கொண்டாடும் விதமாகத்தான் முகத்தில் பச்சை குத்திக் கொள்கிறார்கள்.
இந்த வழக்கத்தை 1940களிலேயே தடை செய்துவிட்டார்கள். அதாவது மனிதனை மனிதன் வேட்டையாடக்கூடாது என்றார்கள். அதையும் மீறி சில காலம் இந்த வழக்கம் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. கடைசியாக தலையை வேட்டையாடிச் சென்றதாக 1969 ஆம் ஆண்டு ஓர் வழக்கு பதியப்பட்டிருக்கிறது. அதன் பிறகு இந்த வழக்கம் அடியோடு நின்று விட்டதாக கூறுகிறார்கள். தலையை வேட்டையாடி முகத்தில் பச்சைக் குத்திக் கொண்ட கடைசி தலைமுறையான நீலிமா வாலாங்கி என்ற நபரும் முதுமையில் இருக்கிறார்.
இவர்கள் எலும்புகளை தங்களுடைய வெற்றிச் சின்னமாக மட்டுமல்ல அலங்காரப் பொருட்களாகவும் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் வேட்டையாடிய விலங்குகளின் தலைகளை பத்திரப்படுத்துகிறார்கள். காலங்காலமாக அதன் மண்டையோட்டினை பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். வீட்டின் சுவர் முழுமைக்கும் எருமை மாடு, மான், பன்றி இருவாச்சிப் பறவை, மிதுன் என்று அழைக்கப்படுகிற ஒரு வகை மாடு போன்ற விலங்குகளின் தலைகள் தங்கள் வீட்டின் சுவர்களில் வரிசையாக மாட்டி வைத்திருக்கிறார்கள்.
அதையே தங்கள் வீரத்தின் அடையாளமாக தங்கள் மூதாதையர்களின் வீர அடையாளமாக பார்க்கிறார்கள். வழி வழியாக அந்த மண்டையோட்டினை பாதுகாத்து வருவதை பாரம்பரிய வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அந்த காலத்தில் வேட்டையாடி முடித்து வந்ததும் வேட்டையாடிய விலங்கின் தலையையோ அல்லது இவர்கள் கொன்ற மனிதனின் தலையையோ அவர்கள் தங்கியிருக்கும் இடத்தின் வாயிலில் காட்சிக்கு வைப்பார்களாம்.
மனிதர்களை வேட்டையாடும் வழக்கம் தடை செய்யப்பட்டதும் இப்படி வெளியில் காட்சிக்கு வைப்பது குறைந்தது. ஒரு கட்டத்தில் இவர்கள் காலங்காலமாக பாதுகாத்த எலும்புகளை எல்லாம் கைப்பற்றி அதனை எரித்து அழித்து விட்டதாகவும் இந்த மக்கள் கூறுகிறார்கள். எலும்புகளை வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்று சொல்லி அதனை கைப்பற்றியிருக்கிறார்கள்.
இவர்களாகவே கட்டிக் கொண்ட குடிசை வீடு என்றாலும் மிகவும் இடைவேளி விட்டு பெரிய பெரிய வீடுகளாகத்தான் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். காய்கறிகள்,கார்ன்,கறி போன்றவற்றை பாதுகாத்து வைக்க உயரத்தில் தனியாக ஓர் இடம் இருக்கிறது. இது வீட்டின் நடுவில் அமைந்திருக்கிறது. இந்த மக்களின் பிரதான உணவாக அரிசி இருக்கிறது. அரிசியை பாதுகாத்து வைக்க மூங்கிலான பாதுகாப்பு பெட்டகத்தை உருவாக்கி பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இவர்கள் இந்தியா மற்றும் மியான்மர் ஆகிய இரண்டு நாடுகளிலும் வசித்து வருகிறார்கள். ஒரே பழங்குடியின மக்கள் எப்படி இரண்டு நாடுகளில் பிரிந்தார்கள் என்று முதலில் ஆலோசிக்கப்பட்டது. இருவரும் வெவ்வேறு குழுக்களா? அல்லது இவர்கள் ஒரே குழுவைச் சேர்ந்தவர்களா என்றும் ஆராயப்பட்டது. இவர்கள் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் தான். இவர்கள் வசிக்கிற அந்த குக்கிராமம் வழியாக இந்தியா மியான்மர் எல்லை கோடு செல்கிறது. அதனால் இவர்களும் இந்திய மற்றும் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். இன்றைக்க லோங்வா மக்கள் சர்வதேச எல்லைக்கு அருகில் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கே எல்லை தூணில் ஒரு பக்கம் பர்மீஸ் மொழியிலும் இன்னொரு பக்கம் ஹிந்தி மொழியிலும் எழுதப்பட்டிருக்கிறது.
இந்த எல்லைக் கோடு இந்த கிராமத்தின் தலைவர் வீட்டையும் இரண்டாக பிளந்திருக்கிறது. அதனால் மக்கள் அவர் இந்தியாவில் இரவு உணவை எடுத்துக் கொண்டு பக்கத்து நாடான மியான்மருக்குச் சென்று தூங்குவார் என்று பேச்சு கிண்டலாக பேசப்படுகிறது. இவர்கள் எப்போதும் கூட்டமாகவே வாழ்கிறார்கள். இன்றளவும் தங்களுடைய ஊர் தலைவருக்கு கட்டுப்பட்டே வாழ்கிறார்கள்.
இவர்கள் இயற்கையை பெரிதும் நேசிப்பவர்களாக இருக்கிறார்கள். ஆரம்பத்தில் இவர்கள் இந்த மலையை,இயற்கையையே தங்கள் தெய்வமாக நினைத்து வணங்கியிருக்கிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டு கிறிஸ்த்துவ மெஷினரிகள் அதிகரித்த காலத்தில் இவர்களில் தொண்ணூறு சதவீதம் பேர் வரையிலும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியிருக்கிறார்கள். நாகாலாந்தின் எல்லா கிராமங்களில் ஒரு தேவாலயமாவது கட்டப்பட்டிருக்கும்.
ஆரம்ப காலத்தில் எல்லாருமே அந்த கிராமத்தில் இருக்கிறவர்கள் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து இரவில் விவாதிப்பது, நடனமாடுவது, சமைத்து உண்பது என்று இருந்திருக்கிறார்கள். குழந்தைகள் இவர்களின் குலத் தொழிலான வேட்டையடுவதைப் பற்றியும் தங்களுடைய பாரம்பரிய வழக்கத்தையுமே சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்கிறார்கள். மெல்ல மெல்ல நாங்கள் எல்லாரும் வேறு மதத்திற்கு மாற்றப்பட்ட பின்னர் எங்கள் வழக்கம்,கலாச்சாரம் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. இப்போதெல்லாம் எங்கள் குழந்தைகள் யாரும் வேட்டையாடப்பழகுவதில்லை.
முன் காலங்களில் எதிரியின் தலையையே நாங்கள் அலங்காரப் பொருளாக வைத்திருந்தோம். அவை தடை செய்யப்பட்டதும் அந்த எண்ணிக்கையை குறிக்கிற பித்தளையினால் செய்யப்பட்ட ஓர் அலங்கார வடிவத்தை கோர்த்து அதை கழுத்தில் மாட்டியிருந்தார்கள்.