மேற்கத்திய நாடுகளை பொறுத்தவரை ஆண்களை மொடாக்குடியர்கள் என்ற ரீதியில் கூறுவார்கள். அமெரிக்காவில். பிரபலமான தொலைக்காட்சி தொடரான ´டான் டிரேப்பரின் மேட் மென் க்ரானிஸ்´ – லும் இது சிறப்பாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.
இந்நிலையில் பெண்கள் மது அருந்தும் போக்கு அதிகரித்து வருவதாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பொதுவாக மது அருந்துபவர்களில் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகம்.
எனினும் இளம் தலைமுறையினருக்கு இந்த ஒப்பீடு பொருந்தாது. 1991 முதல் 2000 ஆண்டு வரை பிறந்த பெண்கள் ஆண்களுக்கு நிகராக மது அருந்துகின்றனர். இந்த நிலை நீடிக்குமானால் ஆண்களை விட பெண்களே அதிகம் மது அருந்துபவர்களாக மாற வாய்ப்புள்ளது.
மது அருந்துவதால் பெண்கள் சந்திக்கும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவில் 2000 – 2015 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் 45 – 64 வயதுக்குட்பட்ட பெண்கள் சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் விகிதம் 57 சதவீதமாக இருந்தது.
இது ஆண்களில் 21 சதவீதமாக மட்டுமே இருந்தது. 25 – 44 வயதுக்குட்பட்ட பெண்களில் சிரோசிஸ் இறப்பு விகிதம் 21 சதவீதமாக உயர்ந்திருந்த நிலையில் ஆண்களில் இது 10 சதவீதமாக குறைந்திருந்தது.
மது அதிகம் அருந்தி மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுக்கு வரும் வயது வந்த பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அளவுக்கு அதிகமாக, ஆபத்தான அளவுக்கு மது அருந்தும் போக்கு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக இந்தப்போக்கு பெண்களிடையே அதிகம் உள்ளது. ஆனால் அதிகளவில் பெண்கள் மது அருந்துவது மட்டுமே இங்கு பிரச்சனை அல்ல…
மது ஆண்களின் உடலில் ஏற்படுத்தும் பாதிப்பை ஒப்பிடும்போது பெண்கள் உடலில் ஏற்படுத்தும் பாதிப்பு வேறு விதமாக உள்ளது.
மது அருந்தும் பெண்களின் உடலில் குறைந்த அளவிலான ADH என்ற என்சைம் உற்பத்தி ஆகிறது. கல்லீரலில் உற்பத்தியாகும் இத்திரவம் சாராயத்தின் பாதிப்பை குறைக்க உதவுகிறது.
உடலிலுள்ள கொழுப்புச்சத்து சாராயத்தை தக்க வைத்துக்கொள்கையில் நீர் அதை கரைக்க முற்படுகிறது.
பெண்கள் உடலில் கொழுப்பின் அளவு இயற்கையாகவே அதிகமாகவும் நீரின் அளவு குறைவாகவும் இருப்பதால் இயல்பாகவே அவர்களின் உடலில் மதுவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
இந்த அம்சம்தான் ஆண்களை விட பெண்களுக்கு மதுவால் அதிக பிரச்னைகளை ஏற்படுத்துவதாக கூறுகிறார் டான் ஷுகர்மேன். இவர் ஹார்வர்டு மருத்துவ கல்லூரியில் உடலியக்க துறை பேராசிரியராக உள்ளார். மேலும் மாசாசூசெட்ஸில் மெக்லீன் மருத்துவமனையிலும் பணியாற்றுகிறார்.
அதிகம் மது அருந்தும் பெண்கள் அதற்கு அடிமையாவதும் ஆண்களை விட வெகுசீக்கிரம் உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளாவதும் நடக்கிறது. இந்த நிகழ்வு டெலஸ்கோப்பிங் எனப்படுகிறது.
ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கு மதுப்பழக்கம் தாமதமாகவே ஏற்படுகிறது. அதே நேரம் ஆண்களை விட பெண்கள் விரைவாகவே மதுவிற்கு அடிமையாகிவிடுகின்றனர். கல்லீரல் தொடர்பான கோளாறுகள் சீக்கிரமே ஏற்பட்டு விடுகின்றன. இதயங்களும் நரம்புகளும் விரைந்து பழுதடைகின்றன.
ஆண்களின் உடலிலும் பெண்களின் உடலிலும் மது ஏற்படுத்தும் பல பாதிப்புகள் கடந்த சில தசாப்தங்களுக்கு முன்பு வரை அறியப்படவில்லை.
உதாரணமாக, ஆண்கள் மற்றும் பெண்களிடத்தில் மது ஏற்படுத்தும் ADH தொடர்பான தாக்கம் என்னவென்பது 1990 இல் தான் தெரிய வந்தது.
மது தொடர்பான மருத்துவ ரீதியான சோதனைகள் அனைத்தும் 1990 கள் வரை ஆண்களிடம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. மது என்பது ஆண்கள் தொடர்பான பிரச்சினை என நம்பப்பட்டது தான் இதற்கு காரணம்.
மருத்துவ சோதனைகள் ஆண்களிடம் மட்டுமல்ல… பெண்களிடமும் சிறுபான்மையினரிடமும் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆரோக்கியத்துக்கான அமெரிக்க தேசிய நிறுவனம் உத்தரவிட்டது. இதன் பின்பே நிலைமை மாறத் தொடங்கியது.
மருத்துவ ஆய்வுகளின் போது பெண்களைப் பற்றி சிந்திப்பதே இல்லை என்கிறார் ஷரோன் வில்ஸ்னாக். இவர் நார்த் டகோடா மருத்துவ மற்றும் மருந்து அறிவியல் கல்லூரியில் மனோதத்துவ துறை பேராசிரியராக உள்ளார்.
ஆண்களுக்காக செய்யப்படும் எல்லா ஆய்வுகளும் பெண்களுக்கும் பொருந்தும் என்றே இத்தனை காலமாக நினைத்துக்கொண்டிருந்தனர் என்கிறார் ஷரோன் வில்ஸ்னாக்.
1970 களின் தொடக்கத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பிஎச்டி (முனைவர்) படித்துக்கொண்டிருந்த வில்ஸ்னாக், பெண்கள் மற்றும் மது குறித்த தன் பார்வையை எழுதினார்.
பெண்களின் மதுப் பழக்கம் பற்றிய தேசிய அளவிலான நீண்டதொரு ஆய்வுக்கட்டுரையை இவர் எழுதியுள்ளார். மதுப் பழக்கத்துக்கு அடிமையான பெண்கள் பலர் சிறுவயதில் பாலியல் வல்லுறவுக்கு ஆளானவர்களாக இருக்கின்றனர் என்கிறது அந்த ஆய்வு.
2000 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட மதுவுக்கு அடிமையானவர்களின் மூளை ஸ்கேன் (வரிமம்) ஆய்வில், இதில் மதுவின் தாக்கம் ஆண்களின் பெண்களின் மூளையிலேயே அதிகம் இருப்பது தெரியவந்தது.
ஆனால் பாஸ்டன் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி பேராசிரியர் மார்லன்ஆஸ்கர் பெர்மான் ஆய்வில் வேறுவிதமான முடிவுகள் வெளியாயின.
நீண்ட காலமாக மது அருந்துபவர்களின் மூளை ஆராயப்பட்டது. இதில் ஆண் மற்றும் பெண் மூளைகளில் ஒரு சிறிய வித்தியாசம் காணப்பட்டது.
ஆண்களில் மது அருந்தாதவர்களைவிட, மது அருந்துகிறவர்களின் மூளையில் ´ரிவார்டு சென்டர்´ என்ற பகுதி சிறியதாக இருந்தது.
மூளையில் இந்த ´ரிவார்டு சென்டர்´ எனப்படும் இந்த இடம் தான் முடிவுகள் எடுப்பதற்கும் உயிர் வாழ்தலுக்குமே முக்கியமான இடம்.
ஆனால் பெண்களில் மது அருந்தாத பெண்களை விட மது அருந்தும் பெண்களுக்கு இந்த ரிவார்டு சென்டர் பெரிதாகவே இருந்தது.
மது அருந்துபவர்களில் ஆண்களை விட பெண்களின் மூளையே அதிகம் பாதிக்கும் என்ற பொதுவான கருத்தை இந்த ஆய்வு மாற்றியது என கூறுகிறார் ஆஸ்கர் பெர்மான். எதனால் இந்த வித்தியாசங்கள் ஏற்படுகின்றன என்பது விஞ்ஞானிகளுக்கு இன்னும் தெரியவில்லை.
இது போன்ற ஆய்வு முடிவுகள் பாலின பேத அடிப்படையில் மது மற்றும் அதற்கு அடிமையாவது குறித்து ஆய்வு செய்வதன் அவசியத்தை விளக்குவதாக கூறுகிறார் ஷுகர்மேன்.
பெண்கள் மது அருந்துவது என்பது உணர்வு ரீதியான வலியாலும் ஆண்கள் மது அருந்துவது சமூக நெருக்கடியின் தூண்டுதலாலும் இருக்கலாம் என்று அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த தகவலை இதற்கு முன் நான் கேட்டதே இல்லை… மது ஆண்களை விட என்னைப் போன்ற பெண்களைத்தான் அதிகம் பாதிக்கும் என எனக்கு தெரியவே தெரியாது… இந்த மது என்னை வேறு மாதிரி பாதிக்கும் எனத்தெரியவே தெரியாது… என 5 முறை… 6 முறை.. 10 முறை சிகிச்சைக்கு வந்தவர்கள் கூட சொல்லக் கேட்டிருக்கிறேன் என்கிறார் ஷுகர்மேன்.
பல்வேறு அம்சங்களை பார்க்கும்போது மதுப் பழக்கத்தால் பாதித்தவர்களில் ஆண்களை விட பெண்களுக்கு எவ்வாறு மாறுபட்ட சிகிச்சை தருவது என்பதை கண்டுபிடிப்பது அவசியம் என்கிறார் இவர். பாலியல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழக்கமாக மதுவுக்கான சிகிச்சை பெறுபவர்களுடன் சிகிச்சை தந்தால் சரியாக இருக்காது. ஏனெனில் இந்த இடத்தில் அப்பெண்கள் பாதுகாப்பாக உணரமாட்டார்கள்.
இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது மது அருந்தும் ஆண்களுக்கு தரப்படும் சிகிச்சையே பெண்களுக்கும் போதும் என நினைத்த காலம் மலையேறி விட்டது என கருத தோன்றுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.