உலகம் முழுவதும் இருந்து ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் செளதி அரேபியாவுக்கு செல்கின்றனர். ஐந்து நாட்கள் நடைபெறும் அந்த புனிதப்பயணம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் திகதி தொடங்கியது.
செளதி அரேபியாவின் மெக்கா நகர் இஸ்லாமியர்களின் புனிதத்தளமாக கருதப்படுகிறது. இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்தும் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ஹஜ் புனிதப் பயணம். இது இறைவனை வணங்குவதற்கான ஓர் தனி முறையாகும்.
செளதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு துல்ஹஜ் மாதத்தில் புனித யாத்திரை மேற்கொள்வதே ஹஜ். இது அனைவரும் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டிய கடமை என்று சொல்லப்படாவிட்டாலும், ஹஜ் கடமையை நிறைவேற்றும் உடல் மற்றும் பொருளாதாரத் தகுதி கொண்டவர்களுக்கு, இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வாழ்வில் ஒரு முறையாவது அவர்கள் ஹஜ் புனிதப் பயணம் செல்லவேண்டும். வசதியும், உடல் தகுதியும் இருந்தும், இந்தக் கடமையை நிறைவேற்றவில்லை எனில் அவர் குற்றவாளி ஆவர்.
துல்ஹஜ் மாதத்தின் 8 ஆம் நாள் முதல் 12 ஆம் நாள் வரை செளதி அரேபியாவிலுள்ள மினா, அராஃபத், முஸ்தலிஃபா ஆகிய இடங்களில் தங்கி, அந்த நாட்களில் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்ற வேண்டும். மெக்கா நகரில் உள்ள கஃபாவை ´ஏழு முறை இடஞ்சுழியாக சுற்றிவருவது´ (தவாஃப் செய்வது) ஆகியவை ஹஜ்ஜின் முக்கிய அம்சங்களாகும்.
அப்படி கஃபாவை சுற்றிவரும் போது, ஒவ்வொரு சுற்றிலும் ´ஹஜ்ருல் அஸ்வத்´ என்று அழைக்கப்படும் புனித கருங்கல்லை முத்தமிடுவார்கள். கூட்ட நெரிசலால் ´ஹஜ்ருல் அஸ்வத்´-தை நெருங்க முடியவில்லை என்றால், தங்கள் வலது கரத்தை அதை நோக்கிக் காண்பிக்கலாம்.
ஒவ்வொரு சுற்றை முடித்த பின்பும் இறைவனின் பெயரை உரத்துக் கூறவேண்டும். தவாஃப் செய்யும்போது கூறவேண்டிய துவாக்களையும் அறிந்து கொள்ளவேண்டும்.
இத்துணை முக்கியத்துவம் வாய்ந்த ஹஜ் பயணத்திற்காக, இந்த ஆண்டு 20 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் செளதி அரேபியா சென்றிருப்பதாக கணிக்கப்படுகிறது.
உண்மையில், இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் அனைவரும் தங்களை இஸ்லாமியர்கள் என்று கூறிக்கொண்டாலும், இஸ்லாமிய சட்டம் மற்றும் இஸ்லாமிய வரலாற்றின் சுய புரிதலின் அடிப்படையில், முஸ்லிம்கள் பல பிரிவுகளாகவோ அல்லது வகைகளாகவோ பிரிக்கப்படுகிறார்கள். இந்தப் பிரிவுகளின் ஒன்றுதான் அஹமதியா என்னும் பிரிவு.
அஹமதியா முஸ்லிம் பிரிவினரின் நம்பிக்கைகளின் அடிப்படையில், அவர்களை பிற இஸ்லாமியர்கள், முஸ்லிம்களாக ஏற்றுக் கொள்வதில்லை. எனவே, அவர்கள் செளதி அரேபியாவுக்கு ஹஜ் யாத்திரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் யாத்திரைக்காக அவர்கள் மெக்காவுக்கு சென்றால் கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு கடத்தப்படும் ஆபத்தும் இருக்கிறது. இந்த தடைகளை மீறி திருட்டுத்தனமாக ஹஜ் புனிதப் பயணத்திற்காக கடந்த ஆண்டு சென்ற ஒருவரை பிபிசி குழு சந்தித்து பேசியது.
“ஹஜ் யாத்திரை செல்வது அஹமதியா பிரிவைச் சேர்ந்த எங்களுக்கு ஆபத்தானது என்ற விஷயம் மனதில் ஆழமாக பதிந்திருந்தாலும், அங்கு செல்லவேண்டும் என்ற ஆவல் மனதில் இருக்கும். அல்லாவுக்காகவே அங்கே செல்கிறோம் என்பதால், அவருடைய ஆசியும் கிடைக்கிறது. நாங்கள் முஸ்லிம்கள் என்பது அவருக்கே தெரியும்” என்று அவர் கூறினார்.
“சில நாடுகளும் அமைப்புகளும் நாங்கள் இஸ்லாமியர்கள் அல்ல என்று அறிவித்திருக்கின்றன” என்று சொல்கிறார் பிரிட்டனின் மான்செஸ்டரில் உள்ள தாருல் உலும் மசூதியின் இமாம் முகம்மது. “இது அவர்களுடைய கருத்தாகும், அதனால் அஹமதியா பிரிவை சேர்ந்த முஸ்லிம்கள் ஹஜ் பயணத்திற்குப் போகும்போது, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று இமாம் முகம்மது கூறுகிறார்.
“பொதுவாக இஸ்லாமின் எந்தப் பிரிவை சேர்ந்தவர்கள் என்று யாரும் கேட்பதில்லை. நாங்களும் யாருக்கும் எந்தவிதமான பிரச்சனையும் கொடுப்பதில்லை. அங்குள்ள நிலைமையை மாற்றுவதற்காகவோ, உரிமை கோருவதற்காகவோ அங்கு செல்வதில்லை. யாருக்கும் தீங்கு ஏற்படுத்தும் செயல்களையும் நாங்கள் செய்வதில்லை” என்கிறார் இமாம்.
இருந்தாலும், அஹமதியா முஸ்லிம்கள் என்று கண்டறியப்பட்டால், அவர்கள் நாடு கடத்தப்படுவதாக, அதாவது அவர்களின் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக இமாம் சொல்கிறார்.
“நாடு கடத்தப்படுவதாக முடிவு எடுத்தால், அதற்கு அஹமதியா முஸ்லிம்கள் யாருமே எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். ஏன் தெரியுமா? நாங்கள் மெக்கா நகரம் இருக்கும் நாட்டை மதிக்கிறோம்.”
மான்செஸ்டெரில் இந்த மசூதிக்கு வரும் பலருக்கு ஹஜ் யாத்திரைக்கு சென்றுள்ள அஹமதியா இஸ்லாமியர்களைப் பற்றி தெரியும்.
“நான் ஹஜ்ஜுக்கு சென்றதில்லை, ஆனால் ஹஜ் புனித யாத்திரைக்கு செல்ல விரும்புகிறேன், ஏனென்றால் நான் அல்லாவை நம்புகிறேன், தொழுகிறேன். உலகில் உள்ள பிறரைப் போலவே, நானும் ஆன்மீக அனுபவத்தை பெற விரும்புகிறேன்” என்று சொல்கிறார் மான்செஸ்டர் மசூதிக்கு வரும் ஒரு பெண்.
இதே மசூதிக்கு வரும் மற்றொரு நபரிடம் பேசினோம். “சில விஷயங்களை செய்யக்கூடாது என்று மக்கள் தடுக்கப்படுகிறார்கள். ஆனால் அப்போது அவர்களுக்கு அதை செய்ய வேண்டும் என்ற உணர்வுகள் அதிகரிக்கும் என்பது இயல்பான ஒன்றுதான். எனவே ஹஜ் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்ட அஹமதியா முஸ்லிம்களிடையே ஹஜ் யாத்திரை செல்வதற்கான விருப்பம் மிகவும் அதிகமாக இருக்கிறது” என்று அவர் கூறுகிறார்.
ஹனாஃபி இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றும் முஸ்லிம்களின் சமூகம் தங்களை அஹமதியா என்று அடையாளப்படுத்துகிறது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் கிதியான் என்ற இடத்தைச் சேர்ந்த மிர்ஜா குலாம் அகமது என்பவர் இந்த இஸ்லாமியப் பிரிவை தோற்றுவித்தார்.
இந்தப் பிரிவை சேர்ந்தவர்கள், மிர்ஜா குலாம் அஹ்மத், நபிகள் நாயகத்தின் அவதாரம் என்றே நம்புகின்றனர்.
அவர்கள் தங்களுக்கென புதிய ஷரியாவைக் கொண்டு வரவில்லை, இறைதூதர் நபிகள் நாயகத்தின் ஷரியாவையே பின்பற்றுவதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் மிர்ஜா குலாம் அகமதுக்கு, நபிகள் நாயகத்திற்கு சமமான மரியாதையை அவர்கள் அளிக்கின்றனர்.
நபிகள் நாயகத்திற்குப் பிறகு, உலகிற்கு அல்லா வேறு எந்த இறைதூதர்களையும் அனுப்பவில்லை என்று இஸ்லாமின் அனைத்து பிரிவுகளும் நம்புகின்றன.
ஆனால், தீர்க்கதரிசியின் அந்தஸ்தைக் கொண்ட மத சீர்திருத்தவாதியான மிர்ஜா குலாம் அஹமது, இறைதூதர் நபிகள் நாயகத்திற்கு சமமானவர் என்று அஹமதியா பிரிவினர் நம்புகின்றனர்.
இந்த கருத்து வேறுபாடுகளே, கணிசமான எண்ணிக்கை கொண்ட அஹமதியாக்களை இஸ்லாமிய மதத்தினர் என்று பிற இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொள்வதற்கான தடையாக இருக்கிறது.
இந்தியா, பாகிஸ்தான், பிரிட்டனில் கணிசமான எண்ணிக்கையிலான அஹமதியா பிரிவு முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர். பாகிஸ்தான் அரசு அஹமதியா பிரிவினர் இஸ்லாமியர்கள் அல்ல என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.