சமூக ஊடகங்களில் #MeToo என்ற ஹேஷ்டேகில் இந்திய பெண்கள் பாலியல் துன்புறுத்தல் பற்றி எழுதி வருகின்றனர். உண்மையில் பாலியல் துன்புறுத்தல் என்பதன் உண்மையான பொருள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
#MeToo- ´நானும் கூட´ என்ற சர்வதேச இயக்கத்தில் இந்தியப் பெண்களும் இணைந்திருக்கின்றனர். பாலியல் வன்முறைகள் என்பது எவ்வளவு பரவலாக இருக்கிறது என்பதை பதிவு செய்யும் இயக்கம் இது.
இதில் பாலியல் உறுப்புகளின் புகைப்படங்களை அனுப்புவது, வார்த்தைகளால் பாலியல் தொந்தரவு செய்வது, பாலியல் தொடர்பான விஷயங்களை நகைச்சுவை என்ற பெயரில் பேசுவது, தேவையில்லாமல் நெருக்கமாக வருவது, தொடுவது என பலவிதமான பாலியல் ரீதியான சீண்டல்கள் பகிரப்படுகின்றன.
இருந்தாலும், இன்னும் பல பெண்கள் தங்கள் அனுபவங்களையும், வலிகளையும் பதிவு செய்யவில்லை. பாலியல் வன்முறைகளை அதிகபட்சம் தங்கள் தோழிகளிடம் மட்டும் பகிர்ந்துக் கொண்டு அத்துடனே முடித்துக் கொள்கிறார்கள்.
#MeToo போன்ற இயக்கங்கள் தொடங்கப்பட்டாலும், அதில் கருத்துகளை பதிவிடும் பெண்களின் எண்ணிக்கை சொற்பமாகவே இருக்கும். இந்த கனமான மெளனத்திற்கு காரணம் பெண்களின் அச்சமே.
ஆண்களிடம் இதுபற்றி ஒருவித சங்கடமான நிலை நிலவுகிறது. ஊடகங்களில் சரியான மற்றும் தவறான நடத்தைகள் பற்றிய விவாதங்களும் தொடர்கின்றன.
பணியிடங்களில் ஒன்றாக வேலை செய்யும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பரஸ்பரம் ஏற்படும் உறவு நட்பாக இருந்தாலும், ´பாலியல்´ உறவாக மாறியிருந்தாலும் அது துன்புறுத்தல் இல்லை என்பதுதான் இந்த முழு விவாதத்தின் மையம்.
இங்கு முக்கியத்துவம் பெறுவது விருப்பம் அல்லது ஒப்புதல் என்பதன் அடிப்படையில் உள்ளது. பெண்களின் விருப்பத்தையும், ஆசையையும் சொல்லும் சுதந்திரம் பெண்ணுக்கு நமக்கு இருக்கிறதா என்பது வேறு விஷயம். இதைப் பற்றி பிறகு பேசுவோம்.
பெண்ணின் சம்மதத்துடன் சொல்லப்படும் நகைச்சுவையோ, பாராட்டுகளோ, அதில் பயன்படுத்தப்படும் பாலியல் பொருள் தொனிக்கும் வார்த்தைகளோ பிரச்சனையாக கருதப்படாது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
ஒருவருடன் நெருக்கமாக நின்று கைகளை குலுக்குவது, தோளில் கை வைத்து பேசுவது, வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்காக லேசாக கட்டியணைப்பது, அலுவலகத்திற்கு வெளியில் தேநீர், காபி அல்லது மது அருந்துவது எல்லாம் பரஸ்பர ஒப்புதலுடன் நடந்தால் அதில் தவறு இல்லை.
பணியிடத்தில் ஒரு ஆண், பெண் ஒருவரால் ஈர்க்கப்படுவது இயல்பானது. அப்படி ஈர்க்கப்பட்டால், அந்த ஆண், தன்னுடைய சக பணியாளருக்கு அதை நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ தெரிவிப்பார்.
அந்த பெண்ணுக்கு அது பிடிக்கவில்லை என்றால், ´பாலியல்´ ரீதியாக தொடுவது பிடிக்கவில்லை என்பதை நேரிடையாகவோ, நாசூக்காகவோ தெரிவித்த பிறகும் அந்த ஆணின் நடத்தை மாறாவிட்டால், அதை பாலியல் துன்புறுத்தல் என்று வகைப்படுத்தலாம்.
ஆனால், அந்த பெண், குறிப்பிட்ட அந்த ஆணின் செய்கைகளை விரும்பினாலும், அதற்கு ஏற்றாற்போல் நடந்துக் கொண்டலும், முத்தம் அல்லது உடலுறவை விரும்பினாலும், அது வயதுவந்த இருவரிடையிலான உறவு என்பதால் அதை பாலியல் துன்புறுத்தலாக கருதமுடியாது.
அந்த பெண்மணியின் அனுமதியின்றியோ, அவர் நிராகரித்தாலும், ஆண் தனது முயற்சிகளை கைவிடாமல் தொடர்ந்தால், அது பாலியல் துன்புறுத்தலாகும்.
சமூக ஊடகங்களில் #MeToo மூலமாக பெண்கள் எழுதும் சம்பவங்களைப் பார்க்கும்போது, பாலியல் துன்புறுத்தல் செய்யும் ஆணை தடுக்கவோ அல்லது அவருக்கு எதிராக புகார் கொடுக்கவோ உரிமை இல்லாத நிலையோதான் தென்படுகிறது.
உதாரணமாக, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் ஆண், பாதிக்கப்படும் பெண்ணின் உயரதிகாரியாக இருக்கும்போது, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வேறு விதங்களில் தொல்லை கொடுக்கலாம். அது தனது வேலைக்கே உலை வைக்கலாம் என்றோ, தனது முன்னேற்றம் பாதிக்கப்படும் அல்லது குடும்பத்தில் தெரிந்தால் பிரச்சனை வரும் என்பதாலோ சகித்துக் கொண்டு போக வேண்டிய சூழல் ஏற்படலாம்.
ஒப்புதல் கொடுப்பது என்பது, வாய்மொழியாகவோ அல்லது சைகைகளாலோ தெரிவிக்க வேண்டும். இதற்கான பொறுப்பு அந்த பெண்ணுக்கு எந்த அளவுக்கு உண்டோ அதே அளவுக்கு ஆணுக்கும் உண்டு.
அளவுக்கு மீறிய மது போதையில் இருந்தால், ஆணுக்கு அனுமதி கேட்க தோன்றாது, பெண்ணும் எதையும் சொல்லும் நிலையில் இருக்கமாட்டார்.
பாலியல் துன்புறுத்தலை தடுப்பதற்காக நம்மிடம் இரண்டு சட்டங்கள் உள்ளன. அதில் ஒன்று 2013ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது.
முந்தைய சட்டத்தின் கீழ், ´மறுப்பு தெரிவித்தபோதும், ஒருவரை தொடுவது, தொட முயற்சிப்பது, பாலியல் உறவுக்கு அழைப்பு விடுப்பது, பாலியல் ரீதியாக தூண்டும் வார்த்தைகளை பேசுவது, ஆபாசப் படங்களை காண்பிப்பது அல்லது சம்மதம் இல்லாமல் பாலியல் ரீதியாக வல்லுறவு செய்வது ஆகியவை பாலியல் துன்புறுத்தல் என்று கருதப்படும்´.
இரண்டாவது சட்டம், பணியிடத்தில் பாலியல் வன்முறையிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு, பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டம். இது 2013ல் நிறைவேற்றப்பட்டது.
1997-ம் ஆண்டில் விசாகா வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்றமானது பணியிடத்தில் பாலியல் வன்முறை என்பது மனித உரிமைமீறல் நடவடிக்கையாகும் என்பதனை முதல் முறையாக ஏற்றுக் கொண்டது.
இவ்வழக்கில் பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறையை தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.
பாலியல் துன்புறுத்தலுக்கான வரையறை ஒரேமாதிரியாக இருக்கிறது, ஆனால் அது நடைபெற்ற இடமும் சூழலும் வேலையுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.
அதாவது, சம்பவம் அலுவலகத்தில் நடந்ததாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அலுவலக வேலைக்காக வெளியில் செல்லும்போது, பயணம் செல்லும் வழியில், கூட்டத்தில் கலந்து கொள்ள செல்லும்போது அல்லது வீட்டில் ஒன்றாக அமர்ந்து வேலை செய்யும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் அத்தகைய சூழ்நிலைகளும் இதில் அடங்கும். அரசு, தனியார் மற்றும் அமைப்புசாரா துறைகளுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும்.
இரண்டாவது வித்தியாசம் என்னவென்றால், பெண்கள் தாங்கள் அந்த இடத்தில் பணி புரிந்துக் கொண்டே, புகார் அளித்து, தவறு செய்தவருக்கு தண்டனை வழங்கலாம்.
அதாவது, சிறை மற்றும் காவல்துறை போன்ற கடுமையான நடைமுறைகளில் இருந்து விலகி, பணிச்சூழலையும், உண்மையான நிலையையும் அறிந்தவர்கள் இடையே விவகாரம் அலசப்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு விரைவில் நியாயம் வழங்கும் ஒரு சுலபமான வழி இது.
பாலியல் துன்புறுத்தல் நடந்தது என்பதை முடிவு செய்வது யார்?
பாலியல் துன்புறுத்தல் புகார்களை விசாரிப்பதற்காக ஒரு பெண்ணின் தலைமையில் குழு ஒன்றை நிறுவனங்கள் அமைக்க வேண்டும் என்று இந்த சட்டம் அறிவுறுத்துகிறது.
குழுவின் உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களாக இருக்கவேண்டும். பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறை தொடர்பாக பணியாற்றும் அரசு சாரா அமைப்பு ஒன்றின் பிரதிநிதி ஒருவரும் அந்தக் குழுவில் இடம்பெறவேண்டும்.
பத்து பேருக்கு குறைவானவர்கள் வேலை செய்யும் நிறுவனங்கள் அல்லது உரிமையாளருக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டால், அது மாவட்ட நிலையில் அமைக்கப்பட்டுள்ள ´உள்ளூர் புகார்கள் குழு´ வால் விசாரிக்கப்படும்.
எந்தக் குழுவிடம் புகார் சென்றாலும், அது இரு தரப்பினரின் வாதத்தையும் கேட்டு, புகாரில் உள்ள உண்மைத் தன்மை பற்றி முடிவெடுக்கும்.
புகார் உண்மையானது என்று முடிவு செய்யப்பட்டால், புகாருக்கு உள்ளானவர் வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதுடன், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடும் வழங்கவேண்டும்.
புகாரை காவல்துறைக்கு கொண்டு செல்லலாம் என்று புகாரளித்தவருக்கு தோன்றினால் அது குறித்து அவர் முன்னெடுக்கலாம்.
ஆனால், புகார் தவறானது என்று முடிவு செய்ய்யப்பட்டால், நிறுவனத்தின் விதிமுறைகளின்படி, புகாரளித்தவருக்கு பொருத்தமான தண்டனை வழங்கப்படும்.