உலகின் மிக உயரமான சிலையானது இந்தியாவில் அக்டோபர் 31 ஆம் திகதி திறக்கப்பட உள்ளது. இதன் மதிப்பு பல கோடி ரூபாய்.
இதுகுறித்து பிபிசி குஜராத்தியின் ராக்ஸி கக்டேகர் அங்கிருக்கும் விவசாயிகளுடன் பேசினார். தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய போராடிக் கொண்டிருக்கும் வேளையில், அரசாங்கம் ஒரு சிலைக்காக பல கோடி ரூபாய் செலவிடுவது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
குஜராத்தை சேர்ந்த 39 வயதான விவசாயி விஜேந்திர தட்வி, தனது 3 ஏக்கர் நிலத்திற்கு நீர்ப்பாசனம் செய்ய தண்ணீர் கிடைக்காமல் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்.
மிளகாய், சோளம் மற்றும் கடலை ஆகியவற்றை பயிறுடும் இவர், தண்ணீருக்கு மற்ற விவசாயிகளை போல பருவ மழையையே நம்பியிருக்கிறார். அல்லது நிலத்தடி நீரை பம்ப் மூலமாக பயன்படுத்துவார். ஆனால், மழையை தொடர்ந்து வரும் நீண்ட வறண்ட கோடைக்காலம், வறட்சியை ஏற்படுத்தி, தட்வி போன்ற விவசாயிகளின் வருமானத்தை குறைத்துவிடுகிறது.
அதனால், தன் வருமானத்தை அதிகரிக்க, ஒரு கட்டுமான தளத்தில் ஓட்டுனராக பணியில் சேர்ந்தார் தட்வி.
182 மீட்டர் (600 அடி) உயரம் கொண்ட சிலையை குஜராத் மாநில அரசு கட்டி வந்தது. இதுவே உலகின் உயரமான சிலை என்று கூறப்படுகிறது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 29.9 கோடி ரூபாய் செலவில் வெங்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பாதிக்கும் மேற்பட்ட செலவினை குஜராத் அரசாங்கம் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. மீதமுள்ள செலவு மத்திய அரசு அல்லது பொது நன்கொடையினில் இருந்து பெறப்பட்டது.
“ஒரு பெரிய சிலைக்கு செலவு செய்ததிற்கு பதிலாக, விவசாயிகளுக்காக அரசு செலவழித்திருக்கலாம்” என்கிறார் தட்வி. மேலும், அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பலருக்கும் அடிப்படை நீர்ப்பாசன வசதிகள்கூட இல்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
சிலை அமைக்கும் பணி முடிந்துவிட்டது. “ஒற்றுமைக்கான சிலை” என்று அறியப்படும் இது, பட்டேலின் நினைவுச்சின்னமாக நிற்கும்.
வல்லமைமிக்க தேசியவாத தலைவரான சர்தார் பட்டேல், குஜராத்தில் பிறந்தவர். இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும், துணை பிரதமராகவும் இருந்தார் பட்டேல்.
2010 ஆம் ஆண்டு குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது, இந்த சிலை செய்வதற்கான நடவடிக்கைகளை பிரதமர் மோதி முன்னெடுத்தார். பட்டேலின் பெருமைகளை போற்ற பல ஆண்டுகளாக முயற்சி எடுத்துவரும் ஆளும் பா.ஜ.க., நேருவின் வாரிசுகளுக்கு உதவும் வகையில், பட்டேலின் பெருமைகளை காங்கிரஸ் ஒதுக்கிவிட்டதாக குற்றஞ்சாட்டியது.