ஜி ஸ்டுடியோஸ் மற்றும் கமல் ஜெயின் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் திரைப்படம் `மணிகர்ணிகா – ஜான்சியின் ராணி´. ராதாகிருஷ்ணா ஜாகர்லமுடி மற்றும் கங்கனா ரணாவத் இணைந்து இயக்கியிருக்கும் இந்த படத்தில் ராணி மணிகர்ணிகாவாக கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார்.
அங்கிதா லோகண்டே, ஜீஷூ சென்குப்தா, டேனி டென்சாங்போ, அதுல் குல்கர்னி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் வரும் ஜனவரி 25-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் தமிழ் பதிப்பின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.
படம் பற்றி கங்கனா பேசும் போது, 12 வருடங்களாக இந்த மாதிரி ஒரு படத்தில் நடிக்கவில்லையே என வருத்தம் இருந்தது. இந்த படம் தொடங்கிய போது என் உடல் எடை 50 கிலோ. மிகவும் ஒல்லியாக இருந்தேன். ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும் போது என்னுடைய உடல் அதற்கு உகந்ததாக இல்லை என என் சண்டைப்பயிற்சியாளர் கூட சொன்னார். தினமும் 10-12 மணி நேரம் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டி இருந்தது. அதற்கேற்ற வகையில் நிறைய சிரமம் இருந்தது.
ஆக்ஷன் காட்சிகள் ஏற்கனவே எடுத்து முடிக்கப்பட்டன. அதன்பிறகு தான் நான் படத்தை இயக்கினேன். நான் டிராமா காட்சிகளை தான் இயக்கினேன். ராணி லக்ஷ்மி பாய் கதாப்பாத்திரம் வழக்கமான ஒரு கதாப்பாத்திரம் அல்ல. அதை செய்ய எனக்கு நிறைய நம்பிக்கை தேவைப்பட்டது, அர்ப்பணிப்பு தேவைப்பட்டது, அனைத்து மொழி மக்களையும் இந்த கதை சென்றடையும் என நம்புகிறேன் என்றார்.