ஈபிள் டவரின் கீழ் இருக்கும் பூங்காவில் கைகள் ஒன்றோடு ஒன்று பற்றிக்கொண்டிருப்பது போன்ற மிகப்பெரிய ஓவியம் ஒன்று, இன்று, சனிக்கிழமை திறந்து வைக்கப்படுகிறது.
சுற்றுச்சூழலுக்கு ஆபத்து விளைவிக்காத இந்த ஸ்ப்ரே பெயிண்டிங் 600மீட்டர் தூரத்துக்கு வரையப்பட்டுள்ளது. இது ஈபிள் டவரில் இருந்து பார்த்தால் முழுவதுமாக தெரியும்.
பிரான்ஸை சேர்ந்த ஓவியர் சேய்பேவால் இது உருவாக்கப்பட்டுள்ளது. இவர் இயற்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பெரிய ஓவியங்களை வரைவதில் வல்லவர்.
அவரின் வேலைப்பாடு பல மலைப் பகுதிகளிலும், உலகில் உள்ள சில பூங்காக்களிலும் உள்ளன. மண்ணில் மறைந்து போவதற்கு முன் அவை சில நாட்களுக்கே காட்சிக்கு இருக்கும்.
`பியாண்ட் வால்ஸ்` என்று அழைக்கப்படும் அவரின் இந்த சமீபத்திய ஓவியம், மத்திய தரைக்கடலில் மூழ்கும் ஆபத்தில் இருக்கும் குடியேறிகளை மீட்கும் பணியில் ஈடுபடும் தொண்டு நிறுவனத்துக்கான மரியாதை செலுத்தும் விதமாக வரையப்பட்டுள்ளது.
கடந்த வருடம், ஒரு நாளில் மத்திய தரைக்கடலை கடக்க முயன்ற குடியேறிகளில் சராசரியாக ஆறு பேர் உயிரிழந்தனர் என ஐ.நா தெரிவித்திருந்தது.
“இந்த காலத்தில் தங்களை பற்றியே மக்கள் அதிகம் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த வேலைப்பாட்டை ஒற்றுமையின் சின்னமாக பார்க்கலாம்,” என்று தி கார்டியன் செய்தித்தாளிடம் சேய்பே தெரிவித்தார்.
இந்த ஓவியம் பாரிஸ் மேயரால் சனிக்கிழமையன்று திறந்து வைக்கப்படவுள்ளது. இதனை தொடர்ந்து 20 நாடுகளில் சேய்பே தனது ஓவியங்களை பார்வைக்கு வைக்கவுள்ளார்.
லண்டன், பெர்லின், நைரோபி, அர்ஜெண்டினா போன்ற நாடுகளில் இதே மாதிரி கைகள் ஒன்றோடு ஒன்று பற்றிக்கொண்டிருப்பது போன்ற ஓவியத்தை சேய்பே வரையவுள்ளார்.