அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகர் சிட்னியில் உள்ள பொலிஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் வாகனம் மீது, வேன் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதை அடுத்து விபத்துக்கு காரணமான வேனை கண்டுபிடிப்பதற்காக பொலிஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை பொலிஸார் ஆய்வு செய்தனர்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் ஈஸ்ட்வுட் நகருக்கு அருகே அந்த வேனை பொலிஸார் மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த வேனை சோதனையிட்ட போது, அதில் பொட்டலம் பொட்டலமாக போதைப்பொருள் கடத்தி சென்றதை கண்டு அதிர்ந்து போயினர்.
இதை அடுத்து, 273 கிலோ எடையிலான போதைப்பொருளை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு 140 மில்லியன் அமெரிக்க டொலர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், வேனை ஓட்டி வந்த 28 வயதான வாலிபரை பொலிஸார் கைது செய்து, கடத்தல் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.