பெண்ணின் சம்மதம் இல்லாமல் ஓர் ஆண் அவருடன் உடலுறவு கொள்வது பாலியல் வல்லுறவு. ஆனால் தன்னுடன் உடலுறவு கொள்ளுமாறு விருப்பம் இல்லாத ஓர் ஆணை ஒரு பெண் கட்டாயப்படுத்துவது பாலியல் வல்லுறவு ஆகுமா?
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்டத்தின் கீழ் அது பாலியல் வல்லுறவு குற்றமில்லை. ஆனால் இந்தச் செயல்பாடு குறித்த புதிய ஆய்வு நடத்தும் கட்டுரையாளர் இதையும் பாலியல் வல்லுறவு குற்றமாகக் கருத வேண்டும் என்கிறார்.
இதைப் படிக்கும் சிலருக்கு இந்தக் கட்டுரை மன உளைச்சலை ஏற்படுத்தலாம்.
லான்காஸ்டர் பல்கலைக்கழக சட்டக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் சியோபான் வியாரே 2016-17 ஆம் ஆண்டில் பிரிட்டனில் பாலியல் வல்லுறவு குறித்த முதலாவது ஆய்வை மேற்கொண்டார். ஆன்லைன் சர்வே மூலம் 200க்கும் மேற்பட்ட ஆண்களிடம் அவர் தகவல்கள் சேகரித்தார்.
இந்தப் பெண்மணியின் சமீபத்திய ஆய்வு கடந்த வாரம் வெளியானது. 2018 மே முதல் 2019 ஜூலை வரையில் 30 ஆண்களுடன் நேரடியாக நடத்திய நேர்காணலின் அடிப்படையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.
கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வது எந்தச் சூழலில் நடைபெறுகிறது, அதன் பின்விளைவுகள் என்ன என்பவை பற்றியும், குற்றவியல் சட்ட நடைமுறையின் செயல்பாடு குறித்தும் இது ஆய்வு செய்கிறது.
இதில் பங்கேற்றவர்களின் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் அவர்களில் ஒருவரை நான் ஜான் என குறிப்பிடுகிறேன்.
துணைவர் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்ளத் தொடங்குவது தான், ஏதோ தவறுதலாக இருக்கிறது என்று உணர்வதற்கான அறிகுறி என்று ஜான் கருதுகிறார். ஒரு குறிப்பிட்ட அச்சுறுத்தல் சம்பவத்துக்குப் பிறகு அவரை சிகிச்சைக்காக ஜான் அழைத்துச் சென்றிருக்கிறார். இதற்கான மன ரீதியிலான காரணங்கள் குறித்து அந்தத் தம்பதியினர் மணிக்கணக்கில் கலந்துரையாடியுள்ளனர்.
ஆறு மாத காலத்துக்குப் பிறகு, தன்னை துன்புறுத்திக் கொள்வதற்குப் பதிலாக, தனது கவனத்தை ஜான் மீது அந்தப் பெண் திருப்பியுள்ளார்.
´´ஒரு சமயம் நான் ஹாலில் அமர்ந்திருந்தபோது, மனைவி சமையலறையில் இருந்து வெளியே வந்து என் மீது பலமாகக் கையால் குத்திவிட்டு சிரித்துக் கொண்டே ஓடிவிட்டார்´´ என்று ஜான் கூறினார். ´´அந்த வன்முறை அடிக்கடி நடைபெறத் தொடங்கியது.´´
மனைவிக்கு பொது மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது என்கிறார் ஜான். அவருக்கு மன நல ஆலோசனை தரப்பட்டது. மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் செல்லவில்லை.
´´வேலை முடிந்து அவர் வீட்டுக்கு வருவார். வந்து உடலுறவு வேண்டும் என வற்புறுத்துவார்´´ என்று ஜான் கூறுகிறார்.
´´அது வன்முறையாக மாறும். பணி முடிந்து அவர் வீடு திரும்புவாரே என்று நான் பயப்படும் நிலை உருவாகிவிட்டது.´´
ஒருமுறை ஜான் தூங்கி எழுந்தபோது அவருடைய வலது கையை கட்டிலுடன் சேர்த்து கைவிலங்கு போடப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறார். படுக்கையின் அருகே இருந்த ஸ்டீரியோ சிஸ்டத்தின் ஸ்பீக்கரை எடுத்து ஜானின் தலையில் தாக்கிய அவர், மற்றொரு கையையும் நைலான் கயிறால் கட்டிவிட்டு, உடலுறவுக்கு கட்டாயப்படுத்தி இருக்கிறார். பயந்துபோன ஜான், வலியுடன் இருந்ததால், அந்தப் பெண்ணின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.
அதனால் அவரை மறுபடியும் தாக்கிவிட்டு, கைகளை கட்டிய நிலையிலேயே விட்டுச் சென்றிருக்கிறார். அரை மணி நேரம் கழித்து திரும்பி வந்து விடுவித்துள்ளார். அதன் பிறகு அப்போது நடந்தது பற்றி பேச அவர் மறுத்துவிட்டார்.
அவர் கர்ப்பம் தரித்த பிறகு வன்முறை குறைந்தது. ஆனால் குழந்தை பிறந்து சில மாதங்கள் கழித்து, ஒரு நாள் இரவு ஜான் தூக்கத்தில் இருந்து விழித்தபோது, கட்டிலுடன் சேர்ந்து கட்டப்பட்டிருப்பதை உணர்ந்தார். பிறகு தன்னுடைய துணைவி கட்டாயப்படுத்தி வயகரா கொடுத்து வல்லுறவு கொண்டதாகக் கூறுகிறார்.
´´அப்போது நான் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தேன்,´´ என்கிறார்.
´´பிறகு நான் குளியலறைக்குச் சென்று ஷவரில் அமர்ந்து கொண்டேன். எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தேன் என்று தெரியாது. பிறகு மாடியில் இருந்து இறங்கி கீழே சென்றேன். அப்போது மனைவி கேட்ட முதல் கேள்வி, “டின்னருக்கு என்ன சமைக்கட்டும்´´ என்பது தான்.
மற்றவர்களிடம் இதுபற்றி சொல்வதற்கு ஜான் முயற்சித்த போதெல்லாம், அவர்கள் நம்பவில்லை.
´´ஏன் வீட்டைவிட்டு வெளியேறவில்லை என்று பலரும் கேட்டார்கள். நல்லது. அது என் வீடு. என் பிள்ளைகளுக்காக நான் வாங்கினேன். நிதி விஷயத்திலும் கூட, அந்த உறவில் கட்டுண்டு இருக்கிறேன்,´´ என்று ஜான் கூறினார்.
“என்னால் இதை நம்ப முடியவில்லை. நீ ஏன் திருப்பித் தாக்கவில்லை என்று பலரும் கேட்கிறார்கள். சொல்வது எளிது. ஆனால் அதைச் செய்வது எளிதல்ல.´´
டாக்டர் வியாரே நேர்காணல் செய்தவர்களில் மேலும் சில ஆண்களுக்கும் ஜானின் கதையைப் போன்ற அனுபவங்கள் உள்ளன.
“கட்டாயப்படுத்தி வல்லுறவு´´ கொள்ளும் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பெண் துணைவராகவோ அல்லது முன்னாள் துணைவராகவோ இருக்கிறார்கள் என்பது அவருடைய ஆய்வில் தெரிய வந்த விஷயங்களில் ஒன்றாக உள்ளது. (ஆண்கள் மற்றும் பெண்களில் கட்டாயப்படுத்தி வல்லுறவு கொள்வது பற்றி மட்டுமே அவருடைய ஆய்வு கவனம் செலுத்தியுள்ளது.)
குடும்ப வன்முறையில், ஓர் அம்சமாக இந்த அனுபவம் அமைந்துள்ளது. அடுத்தவர்கள் நம்ப மறுத்த அனுபவங்களும், நேர்காணலில் பங்கேற்ற பலருக்கு ஏற்பட்டுள்ளது.
ஒரு காவல் துறை அதிகாரியிடம் இதுபற்றிக் கூறியபோது, அவர் ´´நீங்கள் அதை அனுபவித்து மகிழ்ந்திருக்க வேண்டும், அல்லது சீக்கிரமே அதுபற்றி புகார் தெரிவித்திருக்க வேண்டும்,´´ என்று அந்தக் காவல் அதிகாரி கூறியதாக நேர்காணலில் பங்கேற்ற ஒருவர் தெரிவித்தார்.
´´அது பற்றிப் பேசி சங்கடத்தில் மாட்டிக் கொள்வதற்கு எங்களுக்குப் பயமாக இருந்தது. அதுபற்றி நாங்கள் பேசினால் எங்களை நம்ப மாட்டார்கள். ஏனென்றால் நாங்கள் ஆண்கள். ஆண் ஒருவரை எப்படி கட்டாயப்படுத்தி உறவு கொள்ள முடியும்?´´
வியாரே கண்டறிந்த விஷயங்களில் பின்வருவனவும் அடங்கும்:
$ கட்டாய வல்லுறவுக்கு உள்ளான அனுபவங்களை வெளியில் சொல்வதை ஆண்கள் அவமானமாகக் கருதுகிறார்கள். பாலியல் அத்துமீறல் என்று சொல்லாமல் குடும்ப வன்முறை என்று அவர்கள் புகார் கூறலாம்.
$ மன அழுத்த, மன சிதைவு, தற்கொலை சிந்தனை, பாலியல் குறைபாடு போன்றவை உள்ளிட்டவற்றால் மன நலம் மோசமாகப் பாதிக்கப்படக் கூடும்.
$ திரும்பத் திரும்ப தாங்கள் கொடுமைக்கு உள்ளாவதாக சில ஆண்கள் கூறினர். சிலருக்கு சிறுவயதிலேயே இந்தக் கொடுமை நிகழ்ந்திருக்கிறது. சிலருக்கு வெவ்வேறு வகையான பாலியல் வன்முறைகள் நிகழ்ந்துள்ளன. சில நேரங்களில் இதைச் செய்பவர்களும் ஆண்களாகவே இருந்துள்ளனர்.
$ சிலருக்கு காவல் துறை, குற்றவியல் சட்ட நடைமுறை மற்றும் சட்டம் குறித்து எதிர்மறை எண்ணங்கள் உள்ளன. ஆண்கள் பெண்களைவிட பலசாலிகள் என்பதால், கட்டாயப்படுத்திய வல்லுறவுக்கு வாய்ப்பில்லை என்ற எண்ணத்தை வியாரேவின் ஆய்வறிக்கை தகர்த்துவிட்டது.
பெண்களுடன் உடலுறவு கொள்வதற்கான அனைத்து வாய்ப்புகளையுமே ஆண்கள் நேர்மறையாகவே கருதுகிறார்கள் என்ற எண்ணத்தையும் அது தகர்த்துள்ளது.
ஆண்களுக்கு விரைப்புத்தன்மை ஏற்பட்டால், அவர்களுக்குப் பாலுறவு தேவை என்ற கருத்தும் தவறு என அவருடைய ஆய்வறிக்கை கூறுகிறது. ´´பாலியல் தூண்டுதலின் உடலியல் வெளிப்பாடு தான் விரைப்புத்தன்மை,´´ என்று வியாரே கூறியுள்ளார்.
´´அச்சம், கோபம், பயம் ஏற்பட்டாலும் ஆண்களுக்கு விரைப்புத்தன்மை ஏற்படும்,´´ என்கிறார் அவர்.
´´பாலியல் அத்துமீறலின்போது பெண்களும் பாலியல் ரீதியில் விளைவுகளை வெளிப்படுத்துவார்கள் (உதாரணமாக அவர்கள் உச்சநிலை அடைவார்கள்), ஏனென்றால் அவர்களுடைய உடலானது உடல் ரீதியில் உணர்வை வெளிக்காட்டுகிறது. இது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உள்ள ஒரு பிரச்சனை. இது போதிய அளவுக்கு விவாதிக்கப்படவில்லை. ஆனால், இதற்கான தெளிவான ஆதாரங்கள் உள்ளன,´´ என்று வியாரே கூறியுள்ளார்.
அதிகமாக மது அருந்திய அல்லது அதிக போதையில் உள்ள நிலையில் மற்றும் என்ன நடக்கிறது என்பதை அறிய, தடுத்து நிறுத்த முடியாத நிலையில் இருக்கும்போது கட்டாயப்படுத்திய வல்லுறவு நிகழ்வுகள் நடந்ததாக 2017ல் வியாரே நடத்திய ஆய்வில் பங்கேற்றவர்களில் பலர் கூறியுள்ளனர்.
இரவில் ஒரு பெண்ணுடன் கிளப்புக்கு சென்றுவிட்டு திரும்பும்போது தனக்கு போதை மருந்து கொடுத்து வல்லுறவு செய்யப்பட்டதாக சந்தேகங்கள் எழுந்ததாக புதிய ஆய்வில் பங்கேற்றவர்களில் ஒருவர் கூறியுள்ளார். முறையற்ற உடலுறவிலும் தாம் ஈடுபடுத்தப் பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாம் மாணவராக இருந்த காலத்தில், கோடைக்கால முகாமில் விடுமுறை நாளில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, கட்டாயப்படுத்தி வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாக வேறொருவர் கூறியுள்ளார்.
வேறொரு ஆண் நண்பருக்கு தாம் எழுதிய கடிதத்தை, அங்கு வேலை செய்து கொண்டிருந்த இன்னொரு பெண் கண்டுபிடித்து, எடுத்து வைத்துக் கொண்டு, தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளாவிட்டால், ஆண் ஓரினச் சேர்க்கையாளர் என மற்றவர்களிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டி வல்லுறவு கொண்டார் என்று அவர் கூறியுள்ளார்.
ஒரு பெண்ணுடன் தாம் உடலுறவு வைத்துக் கொண்டால், ´´அது என் வாழ்க்கையை மாற்றிவிடும், ஒருபாலுறவுக்காரர் மீது நாட்டம் ஏற்படும்´´ என்று அந்தப் பெண் நினைத்தார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது பணியாற்றிக் கொண்டிருந்த மற்றவர்களிடம் பேச வாய்ப்பு இல்லாததால், அந்தப் பெண்ணின் கட்டாயத்துக்குப் பணிவதைத் தவிர வேறுவழியில்லாமல் போய்விட்டது என்கிறார்.
தங்களுக்கு ஏற்பட்ட கட்டாய வல்லுறவு அனுபவங்கள் ´´பாலியல் வல்லுறவுகள்தான்´´ என்று தன்னுடன் நேர்காணலில் பங்கேற்றவர்களில் பலரும் கூறியதாக வியாரே தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்டத்தின் கீழ் இது பாலியல் வல்லுறவு என இடம்பெறவில்லை என்பது குறித்து சிலர் வெறுப்படைந்துள்ளனர்.
பிரிட்டிஷ் சமூகம் பெரும்பாலும் இதை பாலியல் வல்லுறவாக கருதாது என்பது குறித்தும் அவர்கள் வெறுப்பாக உள்ளனர்.
´´உங்களுடைய முன்னாள் துணைவர் மது அருந்திவிட்டு, உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது, உங்களை பாலியல் வல்லுறவு செய்வது என்பது படுக்கையறை வினோத ஆசை போல இல்லையா,´´ என்று நேர்காணலில் பங்கேற்ற ஒருவர் கேட்டார்.
மேலும், ´´கட்டாயப்படுத்திய வன்புணர்வு மூலமான பாலியல் வல்லுறவு´´ என்ற குறிப்பிட்ட குற்றச் செயலைக் கூறும் சட்டம் அவுஸ்திரேலியாவில் விக்டோரியா மாகாணத்தில் உள்ளது என்றும் வியாரே குறிப்பிட்டுள்ளார்.
கட்டாயப்படுத்திய வல்லுறவு நிகழ்வுகளை பாலியல் வல்லுறவு சட்டத்தில் சேர்க்கும் வகையிலான திருத்தங்கள் செய்வது ´´தீவிரமாக பரிசீலிக்கப்பட வேண்டிய விஷயம்´´ என்று சமீபத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ள எட்டு பரிந்துரைகளில் ஒன்றாக உள்ளது.