சைபீரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குட்டி விலங்கு ஒன்று நாய்க்குட்டியா அல்லது ஓநாய்க் குட்டியா என்று விஞ்ஞானிகள் கண்டறிய முயன்று வருகிறார்கள்.
ரஷ்யாவின் உறைபனி பகுதியில், இறந்தபோது இரண்டு மாதமே ஆகியிருந்த இந்த குட்டி விலங்கின் முடி மற்றும் பல் அனைத்தும் அப்படியே இருக்கும் அளவுக்கு இதுவரை பாதுகாக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது எந்த விலங்கினத்தை சேர்ந்தது என்று இதுவரை நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனைகளால் சரியாக முடிவு செய்ய முடியவில்லை.
ஓநாய்களுக்கும், நவீன கால நாய்களுக்கும் இடையிலான பரிணாம வளர்ச்சியின் தொடர்பை இந்த விலங்கினம் வெளிப்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
கார்பன் பரிசோதனை இந்தக் குட்டி விலங்கினம் எந்த வயதில் இறந்தது என்றும், உறைநிலையில் எவ்வளவு காலம் பாதுகாக்கப்பட்டது என்றும் கண்டறிய உதவியது. மரபணு வரிசை ஆய்வுகள் இது ஆண் விலங்கினம் என்பதை உறுதி செய்துள்ளது.
நாய்களுக்கும், ஓநாய்களுக்கும் பொதுவான மூதாதையரிடம் இருந்து இந்த விலங்கினம் தோன்றியிருக்கலாம் என இதன் டிஎன்ஏ வரிசையில் நடத்தப்பட்ட ஆய்வு வெளிப்படுத்துவதாக ஸ்வீடனின் மரபணு ஆய்வு மையத்தின் விஞ்ஞானி டாவ் ஸ்டான்டன் என்பவர் சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இந்த மையத்தை சேர்ந்த இன்னொரு ஆய்வாளர் லவ் டாலன், “இந்த விலங்கினம் ஓநாய்க்குட்டியா அல்லது இதுவரை கண்டறியப்பட்ட முற்கால நாய்குட்டியாக இருக்கலாம்” என்று சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இந்த விலங்கினத்தின் மீது மேலதிக மரபணு வரிசை ஆய்வுகளை விஞ்ஞானிகள் தொடர்வர். அவர்களின் கண்டுபிடிப்புகள் நாய்களின் பரிணாம வளர்ச்சி பற்றி அதிக தகவல்களை வெளிப்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.