நடிகை கவுதமிக்கு பாரதிய ஜனதா கட்சியில் விரைவில் தேசிய செய்தித்தொடர்பாளர் பதவி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவில் இப்போது அடிப்படை உறுப்பினராக மட்டும் உள்ள இவர் பிரச்சாரம் மற்றும் கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்திலும் தவறாமல் கலந்துகொண்டு வருகிறார்.
இதனால் அவரை கவுரப்படுத்தும் நோக்கிலும், சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கும் வகையிலும் கவுதமிக்கு செய்தித்தொடர்பாளர் பதவி தரப்பட உள்ளதாம்.
நடிகை கவுதமியை பொறுத்தவரை ஜெயலலிதா மறையும் வரை அவரது அபிமானியாக இருந்தார். அதற்கு பிறகு தேசியக் கட்சியான பாஜக மீது தனது பார்வையை திருப்பிய கவுதமி பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து உரையாடினார். இதையடுத்து பாஜக அடிப்படை உறுப்பினராக இணைந்த அவர் சிறிது காலம் அரசியலில் ஈடுபடாமல் அமைதி காத்தார்.
இந்நிலையில் அண்மைக்காலமாக நடிகை கவுதமி பாஜக சார்பில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதல் ஆளாக கலந்துகொள்வதுடன், தீவிர அரசியலுக்கும் திரும்பியுள்ளார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு கூட பாஜக வேட்பாளர்களை ஆதரித்து கோவை மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தார்.
மேலும், ஊடகங்களிலும் பாஜகவுக்கு ஆதரவாக வலுவான குரல் கொடுத்து வருகிறார் கவுதமி. இதனால் அவருக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் பாஜக செய்தித்தொடர்பாளர் பதவியை அக்கட்சியின் தேசிய தலைமை தீர்மானித்துள்ளதாம். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகக்கூடும் எனத் தெரிகிறது.
தமிழக பாஜகவுக்கு பொங்கலுக்குள் புதிய தலைவரை நியமனம் செய்ய மிக அதிக வாய்ப்புகள் இருக்கிறதாம். ஆகையால் தலைவர் நியமனத்திற்கு பிறகு நடிகை கவுதமி உள்ளிட்ட பல பிரமுகர்களுக்கு கட்சியில் முக்கியப் பதவி அளிக்கப்பட உள்ளது.