ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் நாடுகளில் ஒன்று ஈராக். அங்கு அவர்களை ஒடுக்குவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அமெரிக்க படைகளும் அங்கு முகாமிட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றன. ஆனாலும் அங்கு பயங்கரவாதிகள் நடமாட்டம் குறைந்தபாடில்லை. அவர்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக மிரட்டல்கள் விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவராக செயல்பட்டு வந்த அபு அப்துல் பாரி என்பவர், அடிக்கடி இதுபோன்ற மிரட்டல்களை விடுத்து வந்தார். அவரை ஈராக் பாதுகாப்பு படையை சேர்ந்த ஸ்வாட் குழு மொசூல் நகரில் சுற்றிவளைத்து கைது செய்தது.
சுமார் 250 கிலோ எடை கொண்ட அவரை காரில் ஏற்றி செல்ல முடியாததால், சரக்கு வாகனத்தில் பாதுகாப்பு படையினர் அழைத்து சென்றனர்.
ஐ.எஸ். அமைப்பினருக்கு ஆதரவாக செயல்படாத மதபோதகர்களை கொல்வதற்கான உத்தரவுகளையும் அபு அப்துல் பாரி பிறப்பித்து உள்ளார் என ஈராக் போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.