‘காஷ்மீரை ஆக்கிரமித்துள்ளது இந்தியா’ என்று மலேசியப் பிரதமர் மகாதீர் தெரிவித்த கருத்தையடுத்து, சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை இறக்குமதி செய்ய இந்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது.
ஆக்கிரமிப்பு என்ற ஒற்றைச் சொல் இந்தியா – மலேசியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே மறைமுக வர்த்தகப் போரை துவக்கி வைத்திருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.
இன்று காலையில் நீங்கள் பயன்படுத்திய ஷாம்பூ அல்லது சோப்பு, பற்பசை, வைட்டமின் மாத்திரைகள் அல்லது மேக்கப் பொருள்களில் அது இருந்திருக்கும். காலை சிற்றுண்டிக்காக ரொட்டி டோஸ்ட் செய்யும் போது பயன்படுத்தி இருக்கலாம் அல்லது ரொட்டி மீது தடவிய செயற்கை வெண்ணெயில் அல்லது உங்கள் காபியில் பயன்படுத்திய கீரிமரில் இருந்திருக்கலாம். இன்றைக்கு நீங்கள் பயன்படுத்தியது பாமாயிலாகத்தான் இருந்திருக்கும் என்பது ஏறத்தாழ நிச்சயமான விஷயம்.
உலகில் மிகவும் அதிக பயன்பாட்டில் உள்ள தாவர எண்ணெய் பாமாயில். 50 சதவீத நுகர்வோர் பொருள்களில் பாமாயில் உள்ளது. தொழிற்சாலை பயன்பாடுகள் பலவற்றிலும் அது பங்கு வகிக்கிறது. 2018ல் விவசாயிகள் 77 மில்லியன் டன்கள் பாமாயில் உற்பத்தி செய்திருக்கிறார்கள். 2024க்குள் இது 107.6 மில்லியன் டன்களாக உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
நம் வாழ்வில் இணைந்த பொருளாக பாமாயில் இருக்கிறது. அதன் விசேஷமான ரசாயன பண்பு தான் அதற்குக் காரணம். மேற்காசிய எண்ணெய் பனை விதைகளில் இருந்து எடுக்கப்படும், வாசனையற்ற, வெளிறிய நிறத்தில் உள்ள இந்த எண்ணெய், உணவுப் பொருளுடன் சேர்க்க சௌகரியமானதாக இருக்கிறது. இதன் உருகும் வெப்ப நிலை அதிகம். நிறைகொழுப்பு அளவும் அதிகம்.
வெப்பமான பகுதிகளில் எண்ணெய் பனைகளை வளர்ப்பது எளிது. விவசாயிகளுக்கு நல்ல லாபம் தரக் கூடியது. வளமில்லாத மண்ணாக இருந்தாலும் நன்கு வளரக் கூடியது. அதனால் சமீப கால ஆண்டுகளாக இதை வளர்க்கும் நிலப்பரப்பு அளவு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் எண்ணெய் பனை பெருமளவு வளர்ப்பதற்காக மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் வனங்கள் அழிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் வன உயிரினங்கள் ஆபத்துக்கு ஆளாகியுள்ளன.
உராங்குட்டான் போன்ற அரிய உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. இந்த இரு நாடுகளில் மட்டும் சுமார் 13 மில்லியன் ஹெக்டர் பரப்பில் எண்ணெய் பனை வளர்க்கப்படுவதாக அந்த அரசுகள் கூறியுள்ளன. உலக உற்பத்தியில் ஏறத்தாழ பாதியளவு உற்பத்தி இந்த இரு நாடுகளில் நடைபெறுகிறது. 2001ல் இருந்து 2018 ஆம் ஆண்டுக்குள் இந்தோனேசியாவில் 25.6 மில்லியன் ஹெக்டர் வனப் பகுதிகளில் மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக உலகளாவிய வனப் பகுதி கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது. இது ஏறத்தாழ நியூசிலாந்து நாட்டின் அளவுக்கு இணையானது.
எனவே பாமாயிலுக்கு மாற்று ஒன்றை கண்டுபிடிக்க வேண்டிய நெருக்கடி அரசுகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால், பிரமிக்கத்தக்க பொருளை அகற்றுவது அவ்வளவு எளிதானதல்ல. தங்களது உற்பத்திப் பொருள்களில் இருந்து பாமாயிலை முழுமையாக நீக்கிவிடப் போவதாக 2018ல் அறிவித்த ஐஸ்லாந்து சூப்பர் மார்க்கெட் சங்கிலித் தொடர் நிறுவனத்துக்குப் பாராட்டுகள் குவிந்தன. ஆனால் அடுத்த ஆண்டில் சில பொருள்களில் இருந்து பாமாயிலை நீக்குவது மிகவும் சிரமமாக இருந்தது. எனவே அந்தப் பட்டியலில் இருந்து தன் பெயரை அந்த நிறுவனம் விலக்கிக் கொண்டுவிட்டது.
இதே குணாதிசயங்களைக் கொண்ட வேறொரு தாவர எண்ணெயை கண்டுபிடிக்க வேண்டும் என்பது தான் மிகவும் பொருத்தமான அணுகுமுறையாக இருக்கும். இதற்கிடையில், காட்டாமணக்கு, சால் மரங்களின் பூக்களில் இருந்து எடுக்கும் எண்ணெய், ஜோஜோபா எண்ணெய், கொக்கும் பழங்கள்,மாம்பழ விதையில் உள்ளே இருக்கும் பருப்பு உள்ளிட்ட தாவர பொருட்களைக் கலந்து எண்ணெய் தயாரிக்கும் முயற்சியில் உணவு மற்றும் அழகுசாதன தயாரிப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ள விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
பாமாயில் பயன்பாட்டில் இருந்து இந்த உணவு வகைகளை மட்டும் தான் நீக்க வேண்டும் என்றில்லை. கலோரி மதிப்பு அதிகம் உள்ளதாகவும், அவசிய கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளதாவும், கொழுப்பில் கரையும் வைட்டமின்களை உறிஞ்சிக் கொள்ள உதவுவதாகவும் பாமாயில் இருக்கிறது. உலக அளவில் மாமிசம், கோழியினம் மற்றும் பால் பொருள்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில், பாமாயில் தேவையும் அதிகரிக்கும்.
கோழித் தீவனத்தில் பாமாயிலுக்கு மாற்றாக பொருத்தமான சத்தான உணவை பயன்படுத்த முடியுமா என்பது பற்றி போலந்தில் உள்ள போஜ்னான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.
பூச்சிகளை பயன்படுத்த முடியுமா என முயற்சிக்கிறார்கள். வண்டினங்கள் புழுநிலையில் இருக்கும் போது எடுத்து கோழித் தீவனத்தில் இந்தக் குழுவினர் கலந்து கொடுத்தபோது, நல்ல வளர்ச்சி இருப்பதையும், இறைச்சியின் தரம் மேம்பட்டிருப்பதையும் கண்டறிந்தனர். இந்தப் புழுக்களில் புரதச் சத்து அதிகமாக இருப்பதையும் அறிந்தனர். உணவுக் கழிவில் இருந்து இவற்றை உருவாக்கிவிட முடியும்.
உயர் தரத்திலான மாட்டிறைச்சித் துண்டுகளுக்குப் பதிலாக விலங்குகளுக்கு பூச்சி இனங்களைச் சார்ந்த உயிரினங்களை உணவாகப் பயன்படுத்துவது நல்லதாக இருக்கும் என்றும், அது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும் என்றும் பிரிட்டிஷ் கால்நடை அறிவியல் அமைப்பு சமீபத்தில் முடிவுக்கு வந்துள்ளது.
பாசியினங்களில் சாதாரணமாக கிடைக்கும் எண்ணெயைவிட இரு மடங்கு எண்ணெய் உற்பத்தி செய்யும் ஒருவகை பாசியை தாங்கள் உருவாக்கியிருப்பதாக 2017ல் எக்கோன்மொபில் மற்றும் சிந்தடிக் ஜெனோமிக்ஸ் அமைப்பு அறிவித்தது.
கடந்த ஆண்டு கார் தயாரிப்பு நிறுவனமான ஹோன்டா நிறுவனம், ஓஹியோவில் உள்ள தங்களுடைய என்ஜின் பரிசோதனை மையங்களில் இருந்து வெளியாகும் கரியமில வாயுவை ஈர்த்துக் கொள்ளும் தன்மையுள்ள பாசிகள் வளர்ப்பு வளாகத்தை பரீட்சார்த்த அடிப்படையில் நிறுவியது. இதை பரவலாக்கவும் அந்த நிறுவனம் உத்தேசித்துள்ளது. சான் பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த சோலாஜைம் என்ற உயிரி வேதியல் நிறுவனம், பாசி வகைகளில் இருந்து வாகனங்கள், விமானங்களின் எரிபொருள் மற்றும் ராணுவ பயன்பாட்டுக்கான எரிபொருள்கள் தயாரித்திருக்கிறது.
ஆனால், பொருளாதார ரீதியில் சந்தையில் போட்டியிடக் கூடிய நிலையில், பாமாயில் அளவுக்கு இவற்றை உருவாக்குவது பெரிய தடையாக இருக்கும் என தெரிகிறது. 2013 ஆம் ஆண்டில் முன்மாதிரி பாசி வளர்ப்பு வளாகத்தை ஓஹியோ பல்கலைக்கழகம் உருவாக்கியது. ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அதில் சிறிதளவு தான் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அதை நிர்வகித்து வரும் மெக்கானிக்கல் பொறியாளர் டேவிட் பேலெஸ் ஒப்புக்கொள்கிறார். “சுருக்கமாகச் சொன்னால் இல்லை என்று தான் கூற வேண்டும். இலக்கை நாங்கள் நெருங்கவில்லை. வணிகச் சந்தையில் போட்டியிடும் அளவுக்கு அதை உருவாக்குவது பெரிய சவாலாக இருக்கிறது” என்று அவர் கூறுகிறார். “உங்களுக்கு நல்ல செய்தி சொல்ல வேண்டும் என்று தான் விரும்புகிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாமாயிலுக்கு மாற்றாக எங்களால் அதை உருவாக்க முடியாமல் போனாலும், அது உருவாக்கப்படும் முறையை மாற்றி சுற்றுச்சூழல் மீதான தாக்கத்தை நாங்கள் கட்டுப்படுத்த முடியும். அதற்கு நாங்கள் சற்று பின்னோக்கிப் பார்த்து, பாமாயிலின் தேவையை எது நிர்ணயிக்கிறது என்பதை நாங்கள் கவனிக்க வேண்டும்.
ஒரு ஹெக்டரில் எண்ணெய் பனை வளர்த்தால், ஆண்டுக்கு நான்கு டன் தாவர எண்ணெய் கிடைக்கும். கடுகில் 0.67 டன், சூரியகாந்தியில் 0.48 டன், சோயாபீன்ஸில் வெறும் 0.38 டன் அளவுக்கு தான் எண்ணெய் கிடைக்கும் என்பதுடன் ஒப்பிடும் போது இது அதிக அளவாக இருக்கிறது. நன்கு பராமரிக்கப்படும் எண்ணெய் பனை மூலம், அதே பரப்பளவு நிலத்தில் விளையும் சோயாவைவிட 25 மடங்கு அதிகமான எண்ணெய் கிடைக்கும். அந்த வகையில், பாமாயிலுக்கு மாற்றாக நாம் புதிதாக உருவாக்கும் உணவு எண்ணெயை தயாரிக்க அதிக நிலம் தேவைப்படும். எனவே வனங்கள் அழிப்பு இன்னும் அதிகரிக்கும்.
ஆனால் சுற்றுச்சூழல் மீதான தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் எண்ணெய் பனை வளர்ப்பது சாத்தியம். மேற்கத்திய நாடுகள் பலவும் ஆர்.பி.எஸ்.ஓ. சான்றளிப்பு பெற்ற பாமாயிலை மட்டுமே வாங்குகின்றன. ஆனால், அந்த சான்றளிப்பு பெற்ற எண்ணெய் பயன்பாடு குறைவாக உள்ளது. அதற்கு கூடுதல் விலை தர மக்கள் தயாராக இல்லை. நீடித்த நிலைப்புத்திறன் உள்ள எண்ணெய் தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதால், சான்றளிப்பு பெற்ற எண்ணெயை சந்தையில் லேபிள் இல்லாமல் சாதாரணமாக உற்பத்தியாளர்கள் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எண்ணெய் பனை வளர்ப்பவர்களை கட்டாயப்படுத்துவதற்கு ஆர்.பி.எஸ்.ஓ. அமைப்புக்கு போதிய அதிகாரம் இல்லை, அது செயலற்றதாக உள்ளது என்று குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
“நீடித்த நிலைப்புத்திறன் உள்ள பாமாயில் உற்பத்தி செய்ய வேண்டும் என்று மலேசிய பாமாயில் வாரியத்தினர் பேசுகின்றனர். ஆனால் அதை எப்படி விற்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை” என்று சில காலம் முன்பு வரை சி.எஸ்.ஐ.ஆர்.ஓ. ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்த தாவரவியல் விஞ்ஞானி கைலே ரெனால்ட்ஸ் கூறுகிறார்.
பூமத்திய ரேகையில் இருந்து 20 டிகிரி தொலைவுக்குள் உள்ள பகுதியில் தான் எண்ணெய் பனை வளர்கிறது. மழைக்காடுகள் வளரும் பகுதியாகவும் அது உள்ளது. உலகில் உள்ள மொத்த உயிரினங்களில் 80 சதவீத உயிரினங்கள் இந்த மழைக்காடுகளில் தான் வாழ்கின்றன. எண்ணெய் பனை போன்று எண்ணெய் தரும் வேறு வகை தாவரங்களை வேறு பகுதிகளில் வளர்க்க முடிந்தால், இந்த மழைக்காடுகளின் அழிவை நம்மால் தடுத்துவிட முடியும். அதற்காகத்தான் ரெனால்ட்ஸ் மற்றும் அவருடைய சகாக்கள் பணியாற்றி வருகிறார்கள்.
புகையிலை மற்றும் மக்காச்சோளத்தின் இலைகளில் அதிக எண்ணெய் கிடைக்கும் வகையில் உருவாக்க மரபணு மாற்றம் செய்யும் முயற்சியை கேன்பெராவில் உள்ள ஆய்வகத்தில் சி.எஸ்.ஐ.ஆர்.ஓ. விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். இவற்றின் இலைகளை நசுக்கி எண்ணெய் எடுக்கலாம் என்பது அவர்களின் திட்டம். சாதாரணமாக புகையிலையில் ஒரு சதவீத தாவர எண்ணெய் இருக்கும். ஆனால் அதை 35 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என ரெனால்ட்ஸ் முயற்சி செய்கிறார். அதாவது சோயா பீன்ஸ் விட அதிக எண்ணெய் பெற முயற்சிக்கிறார்.
இருந்தபோதிலும், இதற்குத் தேவையான ஆராய்ச்சியில் யாராவது முதலீடு செய்ய முன்வந்தால், அதிக எண்ணெய் தரும் புதிய வகை புகையிலையை உருவாக்குவதற்கு 12 மாதங்கள் ஆகும் என்கிறார் ரெனால்ட்ஸ். “இது பெரிய தொழில் வாய்ப்பு உள்ள துறை. பாமாயில் வணிகத்தின் இப்போதைய மதிப்பு 67 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் உள்ளது” என்கிறார் ரெனால்ட்ஸ்
இப்போதைக்கு பாமாயில் சந்தை பாதிக்கப்படாது என்பது தெளிவாகத் தெரிகிறது. அதைத் தவிர்ப்பது சாத்தியமற்றது. அதற்கு மாற்று உருவாக்குவதும் சாத்தியமற்றது. நமது உணவு, எரிபொருள் மற்றும் அழகுசாதனப் பொருள் தயாரிப்பு தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய அளவுக்கு மாற்று பயிர் தயாரித்து, உலக சுற்றுச்சூழல் மீதான பாதிப்பைக் குறைப்பதற்கான அறிவியல் ரீதியிலான வாய்ப்புகள் உள்ளன.