சீனாவில் பரவி வரும் தொற்று நோயின் விளைவாக, குறைந்த வருவாயை கண்டுள்ள நிறுவனமாக ஆப்பிள் இன்க் நிறுவனம் மாறியுள்ளது. மேலும் ஆப்பிள் நிறுவனம் தனது மார்ச் மாத காலாண்டு வருவாய், அவ்வளவாக இந்த நிறுவனத்திற்கு கைகொடுக்காது என்றும் தெரிவித்துள்ளது.
ஏனெனில் ஐபோனின் மிகப்பெரிய சந்தையான சீனாவில் மந்தமான நிலையே நிலவி வருகிறது. இதனால் சீனாவில் நுகர்வும் குறைவாகத் தான் உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் தற்போது ஐபோன் உற்பத்தியும் மிக மெதுவாகத் தான் உள்ளது.
சீனாவில் தொழில்நுட்ப நிறுவனத்தின் உற்பத்தி வசதிகள் மீண்டும் திறக்கத் தொடங்கியுள்ளன. ஆனால் அவை எதிர்பார்த்ததை விட மெதுவாக உற்பத்தியை அதிகரித்து வருவதாக முதலீட்டாளர்களுக்கு ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபோன் தேவைக்கு ஏற்றவாறு கிடைக்குமா என்பது சந்தேகம் தான். இது உலகளவில் தற்காலிகமாக வருவாயை பாதிக்கும் என்று இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் மிகப்பெரிய வைரஸ் தாக்குதலில் அறிகுறியாக மின்னணு துறையில் பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் இன்று வழக்கம் போல் தனது உற்பத்தியை தொடங்கினாலும், அது வழக்கத்தினை விட மந்தம் தான் என்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆப்பிள் நிறுவனம், ஒரு டிரில்லியன் டாலர் சந்தை மூலதனத்தினை கொண்ட ஒரு அமெரிக்க முன்னணி நிறுவனமாகும்.
ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய சந்தையே சீனா என்பதால், ஆப்பிள் நிறுவனம் பெருத்த அடி வாங்கியுள்ளது என்றே கூறலாம். ஏனெனில் ஐபாட், டேப்லெட்டுகள், ஹோம் பாட் ஸ்மார்ட்ஸ்பீக்கர், ஏர்போர்ட்கள் உள்ளடக்கிய பலவற்றை ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருந்து தான் தயாரிக்கின்றது. ஏன் ஆப்பிளின் ஒவ்வொரு பொருட்கள் உற்பத்தியிலும் சீனாவினையே சார்ந்திருப்பதால், ஆப்பிள் நிறுவனம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஐபோன்களின் விலை ஏற்கனவே மிக அதிகமாக இருக்கும் நிலையில், ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்த கொடூரா தொற்றுநோய் இன்னும் விலையை அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதிலும் இந்தியாவிலும் கூட இந்த தாக்கம் இருக்கலாம். இது ஐபோன் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மிண்டிற்கு அளித்த பேட்டியில் கனலிஸின் ஆராய்ச்சி ஆய்வாளர், அத்வைட் மார்டிகர் சீனாவிலிருந்து முழுமையாக இறக்குமதி செய்யப்படும் ஐபோன்கள், இந்தியாவில் பற்றாக்குறையை எதிர்கொள்ள கூடும். இதனால் ஐபோன்கள் விலை அதிகரிக்கக் கூடும். குறிப்பாக iPhone SE and iPhone 6S போன்கள் விலை உயர்வைக் காணக்கூடும். ஏனெனில் இது சீனாவில் இருந்து பெறப்படுபவை.
மேலும் கொரோனாவின் தாக்கத்தினால் சீனாவின் வர்த்தகம் முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்மார்ட்போன்களுக்கு சீனாவில் இருந்து தான் 80% உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் போதுமான மூலதன பொருட்கள் இல்லாமல் இந்தியாவிலும் ஸ்மார்ட்போன் உற்பத்தியை செய்ய முடியாது. இதனால் ஒட்டுமொத்த கைபேசித்துறையும் நிச்சயம் முடங்கி போக வாய்ப்புள்ளது. சீனா விரைவில் அதன் உற்பத்தியை தொடங்கினால் மட்டுமே, சிறிதளவு பாதிப்புடன் மீளத் தொடங்கும்.