‘கொரோனா வைரஸ்’ பாதிப்பால் உலக அளவில் சீனாவிற்கு அடுத்தபடியாக பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் கொண்ட நாடாக இத்தாலி உள்ளது. இத்தாலியில் இதுவரை 2,136 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து வைரஸ் தொற்றில் இருந்து தடுக்கும் நடவடிக்கையாக அந்நாட்டின் முக்கிய நகரங்களை மூட, பிரதமர் கியூசெப் கான்டே உத்தரவிட்டார். இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர்.
இந்தநிலையில், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்கள், பால்கனி பகுதியில் இருந்தபடி, ஒன்றாக பாட்டுபாடி மகிழ்ந்து வருகின்றனர். இத்தாலி தேசிய கீதம், இத்தாலிய மொழி பாடல்களை பாடி தங்கள் மனஅழுத்தத்தை போக்கி வரும் அந்த மக்கள், தமிழில் தேவர்மகன் படத்தில் இளையராஜா இசையமைப்பில் உருவான ‘இஞ்சி இடுப்பழகி’ பாடலை பாடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
மக்கள் அனைவரும் குழுவாக பாடும் இந்த காட்சி வைரலாக பரவி வருகிறது. சமூகவலைதளங்களில் சிலர் இது போலியான வீடியோ என்றும், சிலர் இந்த வீடியோ தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் எடுக்கப்பட்டதால் இது உண்மையான வீடியோ என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.