கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது. 4 மாத போராட்டத்துக்கு பிறகு அங்கு வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உருவான சீனாவின் ஹூபே மாகாணம் வுகான் நகரிலும் நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு இயல்பு நிலை திரும்பிவருகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக சீனாவின் பொருளாதாரம் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது. ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு வர்த்தகமும் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
இந்த பொருளாதார இழப்பை ஈடுசெய்ய சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழிற்சாலைகளுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
வாங்கும் சக்தியை அதிகரிக்க, சீன அரசு சார்பில் மக்களுக்கு பரிசு கூப்பன்கள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் மக்கள் பெருமளவில் பொருட்களை வாங்குவார்கள். விற்பனை அதிகரிக்கும் என்று சீன அரசு எதிர்பார்க்கிறது.
பல்வேறு நகரங்களில் இந்த பரிசு கூப்பன் வழங்கும் சிறப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனால் சீன பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும் என்று சீனாவின் வேலைவாய்ப்புத்துறை துணைத் தலைவர் ஹோ ஜெங்பூ தெரிவித்துள்ளார். என்றாலும், சீனாவின் நடவடிக்கை போதுமானது அல்ல என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுபோல் கொரோனா பாதிப்புக்குள்ளான பல்வேறு நாடுகளிலும் பொருளாதாரத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தொழிற்சாலைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.