அமெரிக்காவில் மிசௌரி மாகாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றை தாக்குவதற்காக திட்டமிட்டதாக சந்தேக நபர் ஒருவர், அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ-யுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார்.
பெல்டன் நகரில் 36 வயதான டிமோத்தி ஆர் வில்சன் எனும் நபர் ஒருவரை உள்நாட்டு தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்ய முயற்சித்தபோது இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது என எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது.
அந்த நபர் இனவெறி மற்றும் அரசுக்கு எதிரான கொள்கைகளால் ஊக்குவிக்கப்பட்டுள்ளார் என அதிகாரிகாரிகள் கூறியுள்ளனர்.
அவர் மருத்துவமையை தாக்குவதாக திட்டமிடும் முன் பல இலக்குகளைத் தாக்க குறி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
டிமோத்தி ஆர் வில்சன் பல மாதங்களாக கண்காணிக்கப்பட்டு வந்துள்ளார். இவர் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் அனைத்து வாய்ப்புகளும் இருந்ததாக எஃப்.பி.ஐ கூறியுள்ளது.
இவர் எஃப்.பி.ஐ-யிடம் பேசியபோது அவரிடம் இனவெறி மற்றும் மதவாத சிந்தனைகள் வெளிப்பட்டதாக எஃப்.பி.ஐ கூறியுள்ளது.
டிமோத்தி முதலில் கறுப்பினத்தவர்கள் படிக்கும் பள்ளி, மசூதி மற்றும் யூத வழிபாட்டுக்கூடம் ஆகியவற்றையே தாக்க வேண்டும் என்று இருந்தார்.
ஆனால் கொரோனா காரணமாக கான்சாஸ் நகரம் மூடப்பட்டதால் பெல்டனில் இருக்கும் ஒரு மருத்துவமனையை தாக்க முற்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் இன்றைய நிலையில் முக்கியமாக கருதப்படும் ஒரு வசதியை தாக்க இருந்ததாக கூறினர். ஆனால் அது என்ன என்பதை அதிகாரிகள் கூறவில்லை.
அவர் ஒரு வெடிகுண்டை தயாரிக்க தேவையான அனைத்து பொருளையும் வைத்திருந்தார் என எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது.
வில்சனை கைது செய்யவும் அவரிடம் இருந்த வெடிபொருளை கைப்பற்றவும் சென்றபோது இந்த தாக்குதல் நடந்ததாக எஃப்.பி.ஐ கூறுகிறது. சண்டைக்கு பிறகு அவர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவில் இதுவரை 1000 க்கும் மேலானோர் உயிரிந்துள்ளனர். மேலும் சுமார் 70,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.