கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கு நடிகை ஒருவர் உணவளித்து வருகிறார்.
தெருநாய்களுக்கு உணவளிக்கும் நடிகை
இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள்.
அதுபோல் திரைப்படம் உள்பட பல்வேறு துறை பிரபலங்களும் வீட்டுக்குள்ளேயே இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் கன்னட திரைப்பட நடிகை சம்யுக்தா ஒரநாடு, ஊரடங்கால் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் தெருநாய்களுக்கு உணவளித்து வருகிறார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த ஒரு வாரமாக நாய்கள் உணவு இல்லாமல் போராடி வருவதைக் கண்டு மனம் உடைகிறது. நான் உள்பட சிலர் சேர்ந்து தெருநாய்களை கண்டறிந்து உணவளித்து வருகிறோம். இதற்கு உதவியாக இருக்கும் பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி. தேஜஸ்வி சூர்யாவுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.