கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் முடக்கப்பட்டுள்ளன. எப்போது இந்த ஊரடங்கு தளர்த்தப்படும் என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது. ஆனால், இந்த ஊரடங்கு அவ்வளவு விரைவில் தளர்த்தப்படாது என்றே தோன்றுகிறது.
ஊரடங்கை தளர்த்தாதீர்கள்
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதற்கு முன்பே ஊரடங்கை தளர்த்தினால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் எச்சரித்துள்ளார்.
கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் அமைப்புகள் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என அவர் கோரி உள்ளார்.
கொரோனா பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் தாக்கம் செலுத்தி வருகிறது. சர்வதேச பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி மிக வேகமாக பயணிக்கிறது.
இப்படியான சூழலில் காணொளி மூலமாக உரையாற்றிய டெட்ரோஸ், “விரைவாக கட்டுப்பாடுகளை தளர்த்துவது, மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும்,” என்று கூறி உள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில்
ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் பரவலின் வேகம் குறைந்துள்ளதை வரவேற்றுள்ள அவர், ஆப்ரிக்க நாடுகளில் வைரஸ் கிராமப்புறங்கள் வரை சென்றுள்ளது குறித்து கவலை தெரிவித்தார்.
அவர், “அந்த பகுதிகளில் சுகாதார அமைப்பானது போதுமான அளவில் இல்லை. இப்படியான சூழலில் கொரோனா பரவுவது கடுமையான துன்பங்களைக் கொண்டு வரும்,” என்றார்.
சர்வதேச அளவில் நடப்பது என்ன?
தென் துருவத்தில் முதல் முறையாக பிரேசில் நாட்டில் ஆயிரம் மரணம் பதிவாகி உள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் தரும் தகவலின்படி அந்த தென் அமெரிக்க நாட்டில் 1,068 பேர் பலியாகி உள்ளனர். 19, 789 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல பிரேசில் மாகாணங்கள் கொரோனாவை எதிர்கொள்ளக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட சூழலில் , அந்நாட்டு அதிபர் இந்த கட்டுபாடுகள் எல்லாம் தேவையற்றவை என தொடர்ந்து பேசி வருகிறார்.
அமெரிக்காவில் ஒரே நாளில் 2000 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.
போர்சுகலில் ஊரடங்கு மே 1ஆம் தேதி வரை நீடிக்கப்பட உள்ளது. ஐர்லாந்து நாட்டில் மே 5 வரை ஊரடங்கு நீடிக்கப்பட உள்ளது.
துருக்கியில் இஸ்தான்புல் உள்ளிட்ட 31 நகரங்களுக்கு அடுத்த 48 மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் எப்படி படிபடியாக ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும் என விளக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்த தொடங்கிவிட்டன. ஆனால், கொரோனா கட்டுப்பாட்டுக்கு வந்த பின்பே ஊரடங்கு தளர்த்தப்படும் என ஆளும் அரசு கூறுகிறது.