தமிழகத்தில் காணப்படும் 2 வகை வௌவால்களில் கொரோனா வைரஸ் காணப்படுவது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, இமாசலப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் காணப்படுகிற 2 வகை வௌவால்களில் “வௌவால் கொரோனா” வைரஸ் (பேட் கோவிட்) காணப்படுகிறது. இது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுபற்றிய ஆய்வை நடத்திய புனே தேசிய வைராலஜி நிறுவனத்தின் விஞ்ஞானி பிரக்யா டி யாதவ், “பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிடெரோபஸ் வௌவால் மற்றும் ரூசெட்டஸ் வௌவால் வகைகளை ஆராய்ந்தோம். அவற்றின் தொண்டை மற்றும் மலக்குடல் மாதிரிகளை எடுத்து ஆராயப்பட்டது.”
“இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, இமாசல பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் காணப்படுகிற வௌவால்களில் ‘வௌவால் கொரோனா’ வைரஸ் இருப்பது தெரிய வந்தது. எங்கள் ஆய்வை உறுதி செய்வதற்கு, ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனையும் நடத்தினோம். அதே நேரத்தில், கர்நாடகம், சண்டிகர், பஞ்சாப், தெலுங்கானா, குஜராத், ஒடிசா மாநிலங்களில் காணப்படுகிற வௌவால்களில் ‘வௌவால் கொரோனா’ வைரஸ் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் காணப்படுகிற வௌவால்களில் காணப்படுகிற “வௌவால் கொரோனா” வைரசுக்கும், மனிதர்களுக்கு தற்போது பரவி வருகிற கொரோனா வைரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.