இரண்டு இஸ்லாமியர்கள் மாட்டிறைச்சியை கொண்டு செல்வதாக கூறப்பட்டு பசுக் காவலர்கள் என கூறப்படும் நபர்களால் தாக்கப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவுடன் பசுமாட்டை போற்றும் ஒரு பாடலும் இணைக்கப்பட்டுள்ளது. அதில் “கோமாதவை கொல்பவர்களை கொல்ல வேண்டும்” என்று கூறப்படுகிறது. அந்த வீடியோ இஸ்லாமியர்களை தாக்கிய ஒருவரால் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு, ஐதராபாத்தின் புறநகர் பகுதியான கட்சேகர் என்னும் பகுதியில் நடந்துள்ளது.
அந்த சம்பவம் நடைபெற்ற இடத்தின் காவல் ஆய்வாளர் ரகுவீர் ரெட்டி, தவறான நடவடிக்கையில் ஈடுபட்டது மற்றும் ஊரடங்கு கட்டுபாடுகளை மீறிய குற்றத்தில் அந்த கிராமத்தை சேர்ந்த 10 பேர் கைது செய்துள்ளதாக தெரிவித்தார்.
அந்த வீடியோவில் இருந்த முஸ்லிம்களான ஹஃபீஸ் மற்றும் அவரது உறவினர் மீது ஊரடங்கை மீறியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மஜ்லீஸ் யே பச்சோவ் தஹ்ரீக்கின் தலைவர் அம்ஜெத் உல்லா கான் என்பவரால் மற்றொரு காணொளி பதிவேற்றப்பட்டுள்ளது.
அந்த காணொளியில் ஹஃபீஸ் மற்றும் அவரது உறவினரை அடித்து மிரட்டியிருப்பது போல் உள்ளது.
அந்த வீடியோவில் அவர்கள் இருவரை ஒரு குழு பிடித்து அவர்கள் கொண்டு செல்லும் பைகளை திறக்கக்கூறுகின்றனர். அதில் மாட்டிறைச்சியைப் பார்த்தவுடன் அவர்களை நிறுத்துகின்றனர். அதில் ஒருவர், “பையில் என்ன இருக்கிறது? யாரையாவது கொலை செய்தீர்களா?” எனக் கேட்கிறார். மற்றொருவர் “இது மாட்டிறைச்சி; அவர்களை விடதீர்கள்,” என்கிறார்.
சிலர் தகாத வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். இந்த சம்பவத்தை தடுத்து நிறுத்த போலீஸ் வருகிறது ஆனால் அவர்கள் ஹஃபீச் மற்றும் அவரது உறவினரை லத்தியால் அடிக்கின்றனர்.
வீடியோவில் இருக்கும் ஹஃபீஸ் அப்துல் அலீம் பிபிசி தெலுகு சேவையிடம் பேசினார், “நாங்கள் ஐதராபாத்தில் பேகம்பெட்டில் வசிக்கிறோம் ரம்ஜான் மாதம் என்பதால் நாங்கள் இறைச்சி வாங்க பேகம்பெட்டிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் போங்கிருக்கு வந்தோம். போங்கிரில் இருக்கும் அங்கீகாரம் பெற்ற கடையில் தான் இறைச்சி வாங்கினோம் எங்கள் குடும்பம் மிகவும் பெரிது என்பதனால் நாங்கள் இறைச்சி வாங்க வந்தோம். போலீஸிடம் சிக்கி விடக் கூடாது என்பதற்காக நெடுஞ்சாலையில் வராமல் மாற்று வழியில் வந்தோம். அப்போது கிராமமக்களால் நிறுத்தப்பட்டோம். அவர்களை எங்களிடம் கேள்வி கேட்டனர்; அது மாட்டிறைச்சி இல்லை என்று கூறியபோதும் அவர்கள் எங்களை அடித்தார்கள். பின்னர் காவல் துறை வந்தனர். அவர்களும் எங்களை அடித்தனர். அது மாட்டிறைச்சி இல்லை என்று கூறினோம் இருந்தும் எங்களை அடித்தனர். நாங்கள் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டோம். எங்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர் பிறகு ஒரு மணி நேரம் கழித்து எங்களை இறைச்சியுடன் செல்ல அனுமதித்தனர்,”
மேலும், “அந்த வீடியோ வைரலாகியுள்ளது. அதில் எங்களின் முகம் தெரிகிறது. அதில் அவர்களை எங்களை பசுக்களை கொலை செய்தவர்கள் என்று கூறுகின்றனர். நாங்கள் என்ன சாப்பிடுகிறோம் என்பதற்காக ஏன் தாக்கப்பட வேண்டும்? நாங்கள் என்ன சாப்பிடுகிறோமோ அதை வைத்து எங்களை ஏன் அவமதிக்க வேண்டும்? போலீஸாரிடம் இந்த காணொளியை சமூக வலைதளங்களிலிருந்து நீக்க நான் கோரியுள்ளேன். ஏனென்றால் மீண்டும் நானும் எனது சகோதரரும் தாக்கப்படுவோம் என அச்சமாகவுள்ளது.” என்கிறா ஹஃபீஸ்
காவல் துறையினர், இந்த இரண்டு இஸ்லாமியர்களும் கிராம மக்களால் நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர் என்பதை உறுதி செய்துள்ளனர். இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த சம்பவம் ஏப்ரல் 22ஆம் தேதி நடந்துள்ளது. இவர்கள் கர்சேகர் பகுதியை சேர்ந்தவர்கள் இல்லை. போங்கிரிலிருந்து கட்சேகர் வழியாக ஐதராபாத்துக்கு வந்து கொண்டிருந்தனர். அவர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இல்லை என்பதால் மக்கள் அவர்களை மறித்து விசாரித்தபோது அவர்கள் இறைச்சியுடன் இருந்ததால் தாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எந்த இறைச்சியை வைத்திருந்தாலும், தகுந்த காரணம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வந்ததால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சட்டத்தை கையில் எடுத்து கொண்டதாக கிராம மக்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்றார்.
ஹஃபீஸ் அலீம் மற்றும் அவரது உறவினர் ஹைதராபாத் நகரில் ரசூல்புராவில் உள்ள பேகம்பெட்டில் வசித்து வருகின்றனர். ஊரடங்கின்போது வீட்டைவிட்டு 3 கிலோமீட்டர் தாண்டி வெளியில் செல்ல அனுமதியில்லை.
அதேசமயம் இவர்களை முதலில் நிறுத்தியவர் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் சட்டத்தை கையில் எடுப்பதாக கூறப்படுவது இது முதல் முறையில்லை. இதற்கு முன் ஏப்ரல் 9 அன்று “ஃப்ரண்ட்ஸ் ஆஃப் ஆர்எஸ்எஸ்” எனப்படும் டிவிட்டர் பக்கத்தில் வெள்ளை சட்டை மற்றும் காக்கி கால்சட்டை அணிந்து கையில் தடியுடன் இருக்கும் ஒருவரின் புகைப்படம் பதியப்பட்டு இருந்தது மேலும் “ஆர்எஸ்எஸ் தன்னார்வலர்கள் தெலங்கானா போலீஸுக்கு 12 மணி நேரமாக யதாத்திரிபுவனகிரி செக் போஸ்டில் உதவி வருகிறது #RssinAction” என பதிவிடப்பட்டிருந்தது.
ஆனால் அது என்ன நடவடிக்கை என்பது தெரியவில்லை.
இருப்பினும் கட்சேகரில் நடந்த சம்பவத்துக்கும் ஆர்எஸ்எஸ்க்கும் எந்த தொடர்பும் இல்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. “ஆர்எஸ்எஸ் எந்த பாதுகாப்பு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இந்த சம்பவத்திற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை,” என்கிறார் ஆர்எஸ்எஸ் தெலங்கானா மாநிலத்தின் ஊடக தொடர்பாளர்.
மேலும், “ஆர்எஸ்எஸ் அமைப்பு, உள்ளூர் நிர்வாகத்திற்குள் தலையிடுவதில்லை. மேலும் உள்ளூர் நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்றே நாங்கள் எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடுகிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“கையைமீறி சென்ற இந்த சம்பவத்தை போலீஸார் தலையிட்டு சரியாக கையாண்டுள்ளனர். இது சமூக கலவரமாக மாறக் கூடிய வாய்ப்புள்ள பிரச்சனை.” என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.