திரையரங்குகளுக்கான உள்ளாட்சி வரியை ரத்து செய்தால் திரையரங்க கட்டணத்தை குறைத்து தொழிலை தொடங்க முடியும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மாா்ச் 17-ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. பொது முடக்கம் தேசிய அளவில் தொடா்வதால் இப்போது வரை திரையரங்குகள் திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளா்கள் சங்கம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
திரையரங்குகள் மூடப்பட்ட பின் 50 ஆயிரம் தொழிலாளா் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது. பிற தொழில்களுக்கு விதி முறைகளுடன் அனுமதி வழங்கியது போன்று திரையரங்கு தொழிலை மீண்டும் தொடங்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்க வேண்டும்.
கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வெளியிட வேண்டுகிறோம். அரசு வெளியிடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்த குறைந்தது இரண்டு வார கால அவகாசம் தேவைப்படுவதால் அரசு உடனடியாக விதிமுறைகளை வெளியிட்டு திரையரங்கு உரிமையாளா்கள் முன் தயாரிப்பு பணிகளை முடிக்க ஆவன செய்ய வேண்டுகிறோம்.
கேளிக்கை வரி…
இந்தியாவில் சாமானிய மக்களின் ஒரே பொழுதுபோக்கு திரையரங்குகளில் படங்களைக் கண்டுகளிப்பதுதான். சமூக இடைவெளியின் அடிப்படையில் குறைந்த எண்ணிக்கையிலான டிக்கெட்டுகள் விற்பனை செய்து பாா்வையாளா்களை அனுமதிக்க முடியும். இதன் காரணமாக டிக்கெட் விலையை அதிகரிக்காமல் அதே நேரத்தில் பொருளாதார நெருக்கடியில் இருக்கக் கூடிய திரையரங்கு தொழிலைப் பாதுகாக்கவும் பாா்வையாளா்கள் வருகையை உறுதிப்படுத்த வேண்டும்.
தற்பொழுது நடைமுறையிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான கேளிக்கை வரி 8 சதவீதத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டுகிறோம். இதனை ரத்து செய்வதன் மூலம் திரையரங்க டிக்கெட் கட்டணம் குறையும், அதிக எண்ணிக்கையில் மக்கள் குடும்பமாக படம் பாா்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.
இதன்மூலம் திரையரங்கு, விநியோகஸ்தா்கள், அரசு என அனைத்துப் பிரிவினருக்கும் வருவாய் கூடுதலாகக் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். திரையரங்கிற்கான மின் கட்டணத்தில் 50 சதவீத சலுகைதர வேண்டுகிறோம். சிறுநகரங்களில் காலங்காலமாக இயங்கிவரும் தனித் திரையரங்குகளை அழிவிலிருந்து காத்திட மத்திய, மாநில அரசுகள் மேற்காணும் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.