நடிகர் ரஜினியுடன் எந்த அமைச்சரும் பேசவில்லை; யாரும் துரோகம் செய்ய மாட்டார்கள் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் என்கிறது இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி.
தியாகிகள் தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் உள்ள தியாகிகள் சங்கரலிங்கனார், சூர்யா என்ற பாஷ்யம், செண்பகராமன் சிலைகளுக்கு, அமைச்சர் டி.ஜெயக்குமார், பா.பெஞ்சமின், க.பாண்டியராஜன் மற்றும் முன்னாள் எம்.பி ஜெ.ஜெயவர்தன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன்பின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு டி.ஜெயக்குமார் அளித்த பதில்:
தமிழகத்தில் ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தப்படுமா?
‘நீட்’ தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லை. அதே நிலைப்பாட்டில் தொடர்ந்து நாங்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.
மத்திய அரசு இதற்கு ஏதேனும் பதில் தெரிவித்துள்ளதா?
தொடர்ந்து நாங்கள் அழுத்தம் தந்து வருகிறோம். தமிழக மாணவர்கள் நலன்தான் எங்களுக்கு முக்கியம்.
நடிகர் ரஜினி கட்சி தொடங்க உள்ள நிலையில், தமிழக அமைச்சர்கள் சிலர் அவரிடம் பேசி வருவதாகக் கூறப்படுகிறதே?
எந்த அமைச்சரும் அவரிடம் பேசமாட்டார்கள். இங்கிருந்து கொண்டு துரோகம் செய்யும் கும்பல் இல்லை. எல்லோரும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மீது விசுவாசம் கொண்டவர்கள்தான். இவ்வாறு அமைச்சர் பதில் அளித்தார்.