உலகின் சிறிய நாடுகளில் ஒன்றான பலாவ், அந்த பத்து நாடுகளில் ஒன்று. 1982ஆம் ஆண்டுதான் அங்கு முதன் முதலில் உணவு விடுதியே திறக்கப்பட்டது. அதன் பெயர் பலாவ் ஹோட்டல்.
அப்போது முதல் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள அந்த மிகச் சிறிய நாட்டில் சுற்றுலா துறை அதிவேகமாக வளரத் தொடங்கியது.
2019 ஆம் ஆண்டில் பலாவுக்கு 90,000 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வந்தனர். அது அந்த நாட்டின் மக்கள் தொகையை விட ஐந்து மடங்கு அதிகம். சர்வதேச நாணய நிதியத்தின் தரவின்படி, 2017இல் இந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத்துறையின் பங்களிப்பு மட்டும் 40 சதவீதம்.
ஆனால், இந்த கதையெல்லாம் கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்புவரை தான்.
ஆம், மற்ற உலக நாடுகளை போன்று பலாவிலும் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இங்கு இதுவரை ஒருவருக்கு கூட கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்படவில்லை என்றாலும் முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனவே, மார்ச் மாதம் முதல் பலாவ் ஹோட்டல் மட்டுமல்ல அந்த நாட்டிலுள்ள அனைத்து உணவகங்களும் வாடிக்கையாளர்கள் இன்றி மூடப்பட்டுள்ளன.
இதுவரை கொரோனா பாதிப்பே பதிவாகாத உலக நாடுகள்:
பலாவ்
மைக்ரோனேஷியா
மார்ஷல் தீவுகள்
நௌரு
கிரிபதி
சாலமன் தீவுகள்
துவாலு
சமோவா
வனுவாட்டு
டோங்கா
“உலகின் மற்ற இடங்களை விட இங்கு கடல் மிகவும் அழகாக இருக்கிறது” என்று கூறுகிறார் பலாவ் ஹோட்டலின் மேலாளரும், இணை உரிமையாளருமான பிரையன் லீ.
கொரோனா வைரஸுக்கு முன்பு இந்த விடுதியிலுள்ள 54 அறைகளில் 70-80 சதவீத அறைகள் நிரம்பி இருக்கும். ஆனால், எல்லைகள் மூடப்பட்டவுடன், நிலைமை முன்னெப்போதுமில்லாத அளவுக்கு மோசமானது.
“இது சிறிய நாடு. எனவே, உள்ளூர் மக்கள் விடுதிகளில் தங்குவதில்லை” என்று அவர் கூறுகிறார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையிலும், இங்கு வேலைசெய்யும் 20 பேருக்கு பணிநேரத்தை மட்டுமே குறைத்துள்ளாகவும், பணிநீக்கம் செய்யவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
“விடுதி பணியாளர்களுக்கு பராமரிப்பு, புதுப்பித்தல் போன்ற வேலைகளை கொடுத்து வருகிறேன். ஆனால், நீண்ட நாட்களுக்கு செயல்படாத உணவகத்தை பராமரித்து கொண்டிருக்க முடியாது. இன்னும் ஆறு மாதங்களுக்கு என்னால் பொறுத்திருக்க முடியும். அதற்கு மேலானால், விடுதியை மூடுவதை விட வேறு வழியில்லை” என்று பிரையன் லீ கூறுகிறார்.
ஆனால், குடிமக்களுக்கு நிதி ஆதரவு வழங்கியதுடன், நோய்த்தொற்று பரவலிலிருந்து நாட்டை காப்பாற்றிய பலாவ் அரசின் மீது இவர் எவ்வித குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. “என்னைப் பொருத்தவரை, அரசு நன்றாகவே செயல்படுகிறது.”
எனினும், சர்வதேச எல்லைகளை திறந்தால்தான் பலாவின் இந்த முதல் உணவு விடுதி மூடப்படுவதை தடுக்க முடியும்.
இந்த நிலையில், “அத்தியாவசிய” விமானப்பயணங்களுக்கு மட்டும் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்படும் என்று பலாவின் அதிபர் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
“பொருளாதாரத்தை மீண்டும் தொடங்க வேண்டும். குறிப்பாக, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்பட வேண்டும். இல்லையெனில், இங்கு யாரும் வாழ முடியாது” என்று பிரையன் மேலும் கூறுகிறார்.
பலாவ் நாட்டிலிருந்து சுமார் நான்காயிரம் கிலோமீட்டர் தொலைவிலுள்ள மற்றொரு நாடான மார்ஷல் தீவுகளிலும் இதுவரை ஒருவருக்கு கூட நோய்த்தொற்று பதிவாகவில்லை. ஆனால், நோய்த்தொற்று இல்லையென்றால் அங்கு வேறெந்த பாதிப்பும் இல்லையென்று அர்த்தம் கிடையாது.
மார்ஷல் தீவுகளுக்கே உரித்தான கடற்கரை புறமும், உப்பங்கழி மறுபுறமும் என அமைந்துள்ள ஹோட்டல் ராபர்ட் ரீமர்ஸில் கோவிட்டுக்கு முன்பு, 37 அறைகளில் 75% முதல் 88% வரையிலான அறைகள் நிரம்பியிருந்த சூழ்நிலையில், அது தற்போது வெறும் 3-5 சதவீதமாக குறைந்துள்ளது.
“அருகிலுள்ள தீவுகளிலிருந்து மிகச் சிலர் வந்து செல்கின்றனர்” என்று அந்த விடுதியில் பணிபுரியும் சோபியா போவ்லேர் கூறுகிறார்.
கொரோனா பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் இந்த நாட்டில் 700க்கும் மேற்பட்டோர் வேலையை இழப்பார்கள் என்று கருதப்படுகிறது. இது அந்த நாட்டில் 1997ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்படும் மிகப் பெரிய வேலை இழப்பு எண்ணிக்கையாகும். வேலையிழக்கும் 700 பேரில் 258 பேர் உணவு விடுதிகளில் பணிபுரிபவர்களாக உள்ளனர்.
பலாவ் நாட்டை போன்று மார்ஷல் தீவுகள் முற்றிலும் சுற்றுலாத்துறையை சார்ந்த நாடல்ல. சுற்றுலாத்துறை வீழ்ச்சியை கூட இவர்களால் சமாளித்துவிட முடியும். ஆனால், நாட்டின் பொருளாதாரத்தின் மூலமாக விளங்கும் மீன்பிடித்துறை கொரோனா அச்சுறுத்தலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இல்லாத நாடாக தொடர்ந்து இருப்பதற்காக, பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் படகுகள் மார்ஷல் தீவுகளிலுள்ள துறைமுகங்களுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் டேங்கர்கள் மற்றும் கொள்கலன் கப்பல்கள் உள்ளிட்ட பிற கப்பல்கள் துறைமுகத்திற்குள் நுழைவதற்கு முன்பு கடலில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இதுபோன்ற கட்டுப்பாடுகளால், அங்கு மீன்பிடிக்கும் பணியில் மிகப் பெரிய அளவில் தொய்வு ஏற்பட்டுள்ளதோடு, சரக்கு விமானங்களின் சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளன.
இதனால், மார்ஷல் தீவுகளின் மீன்பிடித்துறையில் இந்த ஆண்டு 50 சதவீதத்துக்கும் மேல் வருவாய் இழப்பு இருக்குமென்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், கொரோனா வைரஸ் நெருங்காமல் பார்த்துக்கொள்ள முடியும், ஆனால் அதை வெல்ல முடியாது. ஏனெனில், இந்த நோய்த்தொற்று ஏதோ ஒரு வகையில் பாதிப்பை விளைவித்து விடுகிறது.
கொரோனா இல்லாத நாடாக தொடர எல்லைகளை தொடர்ந்து மூடுவதால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும், அந்த நிலையிருந்து பின்வாங்கவே கூடாது என்று கூறுபவர்களும் இருக்கவே செய்கின்றனர்.
சுமார் மூன்று லட்சம் மக்கள் வசிக்கும் வனுவாட்டு என்ற நாட்டின் சுகாதாரத்துறை இயக்குநரான லென் தரிவொண்டா, “நான் தற்போது வசிக்கும் தலைநகர் போர்ட் விலாவிலிருந்து சுமார் 270 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் அம்பே என்ற என்ற தீவுதான் என் பூர்வீகம். அங்கு சுமார் பத்தாயிரம் பேர் வாழ்கின்றனர். நீங்கள் அவர்களிடம் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து கேட்டதால், ´முடிந்தவரை நாட்டின் எல்லைகளை மூடியே வையுங்கள்´ என்றே கூறுவார்கள்” என்று அவர் கூறுகிறார்.
“வனுவாட்டிலுள்ள 80 சதவீத மக்கள் இன்னமும் கிராமப்புறங்களிலேயே வசிப்பது மட்டுமின்றி முறைசாரா பொருளாதாரத்தையே கடைபிடிக்கின்றனர். தங்களுக்கு தேவையான உணவை தாங்களே விளைவித்து உண்டு, உள்ளூர் பொருளாதாரத்தை மட்டுமே நம்பி வாழும் அவர்களுக்கு நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பதே மிகவும் முக்கியமாக உள்ளது.”
இருப்பினும், கொரோனா அச்சுறுத்தலால் வனுவாட்டின் பொருளாதாரம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடையும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது.
கொரோனா விவகாரம் ஒருபுறமிருக்க கடந்த ஏப்ரல் மாதம் இங்கு சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களிலிருந்து மீண்டுவர மற்ற நாடுகளுடனான தொடர்பை புதுப்பிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதை அடுத்து, வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள நாடுகளுடனான வர்த்தக உறவு மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் பிறகு, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து அந்த திட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற சிக்கலான சூழ்நிலையில், தாங்கள் பப்புவா நியூ கினியின் நிலையை நினைத்து பார்ப்பதாக தரிவொண்டா கூறுகிறார். “ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், அது காட்டுத்தீ போல பரவிவிடும் என்று அஞ்சுகிறோம். கொரோனா இல்லாத நாடாக கடந்த மாதம் வரை நீடித்த பப்புவா நியூகினியில் நோய்த்தொற்று பரவல் குறுகிய காலத்தில் உச்சத்தை அடைந்தது.”
“பசிஃபிக் பிராந்தியத்தில் உள்ள எங்களை போன்ற நாடுகளின் சுகாதார கட்டமைப்பின் வரம்புகளின்படி, வைரஸை முடிந்த வரை உள்ளே விடாமல் பாதுகாப்பதே சிறந்த வழி” என்று அவர் மேலும் கூறுகிறார்.
கொரோனா இல்லா நாடுகள் என்ன செய்ய வேண்டும்?
குறுகியகால நடவடிக்கையாக அரசுகள் பணியாளர்களுக்கும், தொழில்துறைக்கும் நிதியுதவி வழங்கலாம். நீண்டகால அடிப்படையில், தடுப்பு மருந்துக்கு காத்திருப்பதே ஒரே வழி.
இடைப்பட்ட காலத்தில் பயண கட்டுப்பாடுகளே நோய்த்தொற்று பரவாது என்ற நம்பிக்கையை அளிப்பதாக உள்ளது. எனினும், இந்த நாடுகளும் கொரோனா பரவல் ஏற்பட்டால் அதை திறம்பட கையாளும் வழிமுறைகளில் நிபுணத்துவம் பெற்றிருப்பது அவசியமாகிறது.
இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய ஆசிய வளர்ச்சி வங்கியின் ரோம்ல் ரபனல், “நோய்த்தொற்று பரிசோதனை, பரவல் மூலங்களை கண்டறிதல், தனிமைப்படுத்தும் மையங்கள் உள்ளிட்டவற்றை தயாராக வைத்திருப்பது நல்லது. இதுதொடர்பாக இந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வந்தாலும், அதன் செயலாக்கம் போதுமானதாக இல்லை” என்று அவர் கூறுகிறார்.
இதுபோன்ற மிகவும் சிக்கலான காலகட்டத்தில், “பசிபிக் நாடுகள் சர்வதேச நாடுகளிலிருந்து தங்களை தனிமைப்படுத்திக்கொள்வதே சரியான முடிவாக இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை” என்று கூறுகிறார் லோவி இன்ஸ்டிடியூட்டின் பசிபிக் தீவுகள் திட்டத்தின் இயக்குநரான ஜொனாதன் பிரைக்.
“பசிபிக் நாடுகள் அவற்றின் எல்லைகளை திறந்தாலும், அவை சுற்றுலாவுக்கு நம்பியுள்ள ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் அவற்றின் எல்லைகளை இப்போதைக்கு திறப்பதாக இல்லை” என்று அவர் கூறுகிறார்.