கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு குறைந்த விலை கருவிகள் – உலக சுகாதார நிறுவனம் மற்றும் பிற பிபிசி செய்திகள்
கோவிட் -19ஐ ஒரு சில நிமிடங்களில் பரிசோதனை செய்யும் ஒரு முறை ஏழை மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளுக்கு விரிவாக்கப்படும் என உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது.
இந்த பரிசோதனைக்கு ஐந்து டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 380 ரூபாய்) மட்டுமே ஆகும். போதுமான மருத்துவ உள்கட்டமைப்புகள் அற்ற ஏழை மற்றும் குறைந்த வருமானம் உடைய நாடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
இந்த பரிசோதனை கருவியை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி அடுத்த ஆறு மாதங்களில் 12 கோடி பேருக்கு இந்த அதிவேக கொரோனா பரிசோதனையைச் செய்யலாம்.
உலக சுகாதார நிறுவனம் இதனை முக்கிய மைல்கல் என்கிறது.
பரிசோதனை மற்றும் அதன் முடிவுகள் வரும் நேரம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள கால இடைவெளிதான் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பல நாடுகளில் பெரும் சவாலாக இருக்கிறது.
இந்த புதிய கருவி குறித்துப் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ், “இது மிகவும் சிறியது மற்றும் பயன்படுத்த எளிதானது. பரிசோதனை முடிவுகள் 15 முதல் 30 நிமிடங்களில் வந்துவிடும்,” என்றார்.
மருந்து தயாரிப்பு நிறுவனமான அபோட் மற்றும் எஸ்.டி பயோசென்சார், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் 12 கோடி கருவிகளை உற்பத்தி செய்ய ஓர் ஒப்பந்தம் போட்டுள்ளதாகக் கூறினார் டெட்ரோஸ்.