குஜராத் மாநிலத்தில் காங்கோ காய்ச்சல் பரவிவருவதையடுத்து மகாராஷ்டிரத்தின் எல்லைப்புற மாவட்ட அதிகாரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிரிமியன் – காங்கோ குருதிக்கசிவுக் காய்ச்சல் விலங்குகளுக்கு ஏற்படக்கூடிய நோயாகும். சில சமயங்களில், விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு நேரடியாகவோ அல்லது சிலவகை உண்ணி இனங்களினாலோ பரவும். இந்தக் காய்ச்சலுக்கு தகுந்த சிகிச்சை முறை இல்லாததால் தகுந்த முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் குஜராத்தின் சில மாவட்டங்களில் காங்கோ காய்ச்சல் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மகாராஷ்டிரத்தின் எல்லை மாவட்டங்களுக்கும் இது பரவ வாய்ப்புள்ளது என்று பால்கர் கால்நடை வளர்ப்பு துறையின் துணை ஆணையர் டாக்டர் பிரசாந்த் டி காம்ப்ளே தெரிவித்துள்ளார்.
ஹைலோம்மா வகை உண்ணிகள், விலங்குகளையும் மனிதர்களையும் கடித்து ரத்தத்தை உறிஞ்சிக் குடித்து உயிர்வாழும் ஒட்டுண்ணிகள். காடுகளில் வாழும் பல்வேறு விலங்கினங்களை ஒட்டுண்ணிகள் கடிக்கும். மேலும், சில பறவையினங்களின் உடலிலும் இத்தகைய வைரஸ் காணப்படும். இவற்றைக் கடிக்கும் ஒட்டுண்ணிகளின் உடலுக்குள் இந்த வைரஸ் வந்துவிடும். இவை, வீட்டில் வளர்க்கப்படும் மாடு, ஆடு போன்ற விலங்குகளை ஒட்டுண்ணிகள் கடிக்கும்போது, வைரஸ் தொற்று ஏற்படும்.
மனிதர்களைக் கடிக்கும்போதும் நேரடியாகவே நோய்த்தொற்று ஏற்பட்டுவிடும். இந்த நோய் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், 30 சதவீத நோயாளிகள் இறக்க வாய்ப்புள்ளது.
இதன்காரணமாக தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து தடுப்புப் பணிகளை செயல்படுத்துமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.